பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

முத்துமணி பொங்கிவந்த தன் அழுகையை யெல்லாம் மிக முயன்று அடக்கிக் கொண்டாள். ஆனால், தன்னைப் பெற்ற உண்மையான அம்மாவைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று மனத்துக்குள் முடிவு கட்டிக் கொண்டாள்.

தங்கம்மாளிடம் எப்போது கேட்டாலும் அவள் "நான் தான் உன்னைப் பெற்ற அம்மா! உன் அப்பாவை வேண்டுமானாலும் கேட்டுப்பார்" என்று சொன்னாள். ஆனால் முத்துமணிக்கு மட்டும் தன்னைப் பெற்ற அம்மா வேறு யாரோ இருக்கிறார்கள் என்றே தோன்றியது.

முத்துமணி ஒருநாள் யாருக்கும் தெரியாமல் கட்டுத்துறைக்குப் போனாள். கட்டுத்துறையில் மாடுகளுக்குப் புல் போட்டுக் கொண்டிருந்தான் கந்தன். கந்தன் மாடு மேய்ப்பவன். அவனிடம் முத்துமணி போய் " கந்தா, எனக்கு ஓர் உதவி செய்வாயா?" என்று கேட்டாள்.

"என்ன?" என்று கேட்டான் கந்தன்.

"என்னைப் பெற்ற அம்மாவை நான் பார்க்க வேண்டும். அவர்களிடம் என்னைக் கூட்டிக் கொண்டு போய் விடுகிறாயா?" என்று கேட்டாள்.

கந்தனுக்கு முத்துமணியின் உண்மையான அம்மாவையும் அப்பாவையும் நன்றாகத் தெரியும். ஆனால், அவர்கள் அப்போது எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாது.