பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



60 நல்வழிச் சிறுகதைகள்

"அம்மா, ஆக வேண்டியதைச் செய்யாமல், அழுது கொண்டிருந்தால் என்ன பயன்?” என்று கேட்டான் மன்னன்.

“ஐயா, நான் கிழவி! என்னால் என்ன முடியும் ?” என்று கேட்டாள் கிழவி.

“அம்மா, நான் உங்கள் மகளைப் பார்க்கலாமா?’ என்று கேட்டான் அரசன்.

கிழவி உள்ளே கூட்டிச் சென்று, தன் மகளைக் காட்டினாள்.

பாண்டியன் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கினான். அன்றே ஏதாவது செய்யாவிட்டால், மறுநாள் நம்ப முடியாது என்று தோன்றியது.

“அம்மா, இந்த ஊரில் இருந்து கொண்டே இப்படி நோயை வளரவிட்டு விட்டீர்களே! வணிகர் அறம் வென்றானிடம் சென்று ஏதாவது உதவி கேட்டு வாருங்கள். நான் அதுவரை உங்கள் மகளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்,” என்றான் மன்னன்.

“அப்பா ! நீ நன்றாயிருப்பாய் ! எல்லோரும் அறம் வென்றானைப் பற்றிப் புகழ்ந்து பேசுகிறார்கள். இருந்தாலும் எனக்கு இதுவரை இந்த எண்ணம் வரவேயில்லை. இப்போதே நான் போய் வருகிறேன்,” என்று சேலையை இடுப்பில் வரிந்து கட்டிக் கொண்டு, கிழவி விரைந்து நடந்தாள்.