பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நாரா. நாச்சியப்பன் . 43

"பொருள்கள் புலனாவது எப்படி?” என்று மூன்றாவது கேள்வியையும் கேட்டு முடித்தார் அரிசங்கரர்.

“கண்ணொளியும் விண்ணொளியும் கலந்து!” என்று பதிலளித்தான் மதிவாணன்.

சிறுவன் ஏதாவது ஒன்றைத்தான் சொல்லுவான்; அகப்பட்டுக் கொள்வான் என்று எதிர்பார்த்தார் அவர். ஆனால், மதிவாணன் அவர் எண்ணத்தைத் தவிடு பொடியாக்கி விட்டான்.

அடுத்து மதிவாணன் கேள்வி கேட்க வேண்டிய கட்டம் வந்தது.

“நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டான் மதிவாணன்.

வேதாந்தத்தில் இந்தக் கேள்விக்கு யாரும் விடையளித்ததே கிடையாது. சிறுவன் சரியான ஆளாக இருக்கிறான் என்று நினைத்துக் கொண்ட அரிசங்கரர், தனக்கு இக்கேள்விக்கு விடை கூறத் தெரியாது என்று சொல்லி விட்டார்.

“நீங்கள் எங்கு செல்லப் போகிறீர்கள்?” என்று கேட்டான் மதிவாணன்.

இறந்தவர்கள் சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ போவார்கள் என்பது சமயக் கொள்கை. தான் போக வேண்டிய இடத்தைத் தீர்மானிக்க வேண்டியது ஆண்டவனே தவிரத் தானல்ல என்று எண்ணிய அரிசங்கரர் இக்கேள்விக்குத் தன்னால் விடை கூற இயலவில்லை என்று கூறி விட்டார்.