மணிவாசகம் என்று ஒரு செல்வன் இருந்தான். அவன் தன்னை நாடி வந்த ஏழை எளியவர்களுக்கு இல்லை என்னாது, கொடையீந்தான். பாரி மன்னனே மணிவாசகமாகத் திரும்பிப் பிறந்து விட்டான் என்று மக்கள் பேசிக்கொள்வார்கள். மணிவாசகம் கொடுத்துக் கொடுத்து ஏழையானான். ஏழையான பின் பல துன்பங்களுக்காளாகிக் கடைசியில் பட்டினியாகவே கிடந்து இறந்து போனான். அவனுக்கு ஒரு மகன் இருந்தான். மகன் பெயர் அருளரசன்.
சிறுவயதிலேயே தந்தையை இழந்த அருளரசன் இளமைப் பருவத்தில் வறுமையினால் பெருந்துன்பத்திற்கு ஆளானான். ஏழை எளியவர்களுக்குத் துன்பம் ஒரு பொருட்டா என்று அவன் துன்பங்களையெல்லாம் தாங்கிக் கொண்டான். நாள்தோறும் உழைத்துப் பெறும் ஊதியத்தைத் தவிர அவனுக்கு வேறு வருமானம் இல்லை. அடி முதல் இல்லாததால் அவனால் வாணிகம் செய்து தன் தந்தையைப் போல் செல்வம் சேர்க்கவும் முடியவில்லை. இருந்தாலும் தன்னை அண்டியவர்களுக்குத் தன்னால் ஆன மட்டும் உழைத்தும் பொருள் கொடுத்தும் உதவி வந்தான்.
தமிழ் நாட்டிலே இருந்த மணிவாசகத்தின் புகழ் வடக்கே கங்கைக்கரை வரை பரவியது. ஆனால் அந்தப் புகழ் கங்கைக் கரையை அடைந்த காலத்தில் மணிவாசகம் உலக வாழ்வை நீத்து விட்டான்.
ந. சி. 1-4