பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நாரா. நாச்சியப்பன் 57

அந்தப் புலவர் சென்றபின், அவைப் புலவர் அரசனை நோக்கி, “அரசே, அந்தக் கவிதையில் ஒன்றுமில்லை என்பதற்காகவல்லவா நான் இரண்டு கைகளையும் விரித்துக் காண்பித்தேன். தாங்கள் என் கை விரல்களை எண்ணிக் கொண்டு, பத்துப் பொன் கொடுக்கச் சொன்னிர்களோ?” என்று கேட்டார்.

“அல்ல, அல்ல, கவிதைக்காக நான் பரிசு கொடுக்கவில்லை. அந்தப் புலவரின் வறுமையைப் போக்கவே பரிசு கொடுத்தேன். பாவம், வயிற்றுக் கொடுமையால் அல்லவா என்னையே இறைவனாக்கி விட்டார் !” என்று அறிவிலும் திருவிலும் பெரியவரான அந்தப் புலவருக்காக இரக்கப்பட்டான் பாண்டியன்.

அதைத் தொடர்ந்து வள்ளன்மையைப் பற்றி அவையில் பேச்சு எழுந்தது. பாரி, ஓரி முதலிய கடையெழு வள்ளல்களுக்குப் பின், தமிழ் நாட்டில் வள்ளல்களே பிறக்கவில்லை என்று ஒருவர் கருத்துச் சொன்னார்.

கொடை வழங்குபட்டி என்ற ஊரில் அறம் வென்றான் என்ற வணிகன் ஒருவன் இருப்பதாகவும், அவன் செய்யாத அறம் இல்லையென்றும், அவையில் ஒருவர் கூறினார்.

அறம் வென்றானுடைய பெருமைகளை ஐந்தாறு பேர் பேசத் தொடங்கி விட்டனர். கொடை கொடுப்பதிலும், புலவர்க்குப் பரிசு வழங்குவதிலும், அவன் பாரிக்குச் சளைத்தவனல்லன் என்று ஒருவர் கூறினார்.