பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



48 . நல்வழிச் சிறுகதைகள்

சாப்பிட்டுக் கொண்டு, வேலை செய்யாமல் இருந்தான்.

ஆனால், வேலை செய்யாமல் இருக்க முடியவில்லை. ஆகவே, தானாக ஒரு வேலையை மேற்கொண்டான். அந்த வீட்டில் அதிகமாக உழைத்தவன் சமையல்காரன்தான். அவனுக்குக் கூட வேலை பார்க்க ஒரே ஒரு வேலைக்காரன்தான் இருந்தான். அத்தனை பேருக்கும் சாப்பாடு தயாரிப் பதில், அவன் நாள்தோறும் மூச்சு வாங்க வேலை செய்ய வேண்டியிருந்தது. மாணிக்கம் சமையல்காரனுக்கு ஒத்தாசையாக வேலை பார்த்தான். சமையல்காரனுக்கும் மாணிக்கத்தை மிகவும் பிடித்திருந்தது.

சாத்தப்பர் வீட்டில் தங்கும் நாட்களில் மாணிக்கம் அவருக்குச் சாப்பாடு பரிமாறுவான். மேலும் அவர் சொல்லுகிற சிறு வேலைகளைக் கவனிப்பான். மற்றநாட்களில் சமையல்காரனுக்குத் துணையாக வேலைபார்த்துக்கொண்டு இருப்பான்.

சாத்தப்பர் ஒரு நாள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, அவன் ஊர் பேர் முதலியவற்றை விசாரித்தார். மாணிக்கம் தன் குடும்பத்தைப் பற்றிய விவரங்களைக் கூறினான். எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்ட சாத்தப்பர், அவன் தனக்கு உறவு முறையுள்ளவனாக இருப்பதைத் தெரிந்து கொண்டார். அவன் தன்னிடம் வந்து சேர்ந்தது பற்றி மனத்திற்குள் மகிழ்ச்சியடைந்தார்.