என்று இருவரும் அவசரம் அவசரமாக எழுதிக் கீழே போட்டார்கள்.
காற்றில் மிதந்துவந்து கீழே விழுந்த அந்தக் காகிதத் துண்டுகளை அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு ஓடின. “காற்றில் பறந்து இந்தக் காகிதங்கள் வந்தன” என்று குழந்தைகள் தாய்தந்தை முதலியவர்களுக்குச் சொன்னார்கள்.
இதனால் செய்தி ஊரெல்லாம் வேகமாகப் பரவிவிட்டது. அந்த ஊர்மக்களும் இதை உண்மை என்றே நம்பினார்கள். “இல்லாவிட்டால் காற்றிலே எப்படி இந்தக் காகிதங்கள் பறந்து வரமுடியும்?” என்று அவர்கள் ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டார்கள். காற்றிலே பறந்து வந்ததால், யாரோ நம்மை எச்சரிக்கை செய்யவே ஆகாயத்திலிருந்து வீசியிருக்கிறார்கள் என்று அவர்கள் நம்பினார்கள்.
அந்த ஊருக்குப் பக்கத்திலே ஒரு பெரிய மலை இருந்தது. அதன் அடிவாரத்திலே பெரிய பெரிய குகைகள் இருந்தன. அவற்றிலே ‘மலசர்’ என்று சொல்லப்படும் ஏழைமக்கள் வாழ்ந்துவந்தார்கள்.
மலசரையெல்லாம் அந்த ஊர்மக்கள் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைத்திருந்தார்கள்.
ஆனால், இப்பொழுது அந்த மலசர் வாழும் குகைகளே தங்களுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கும் என்று எல்லாரும் குழந்தை குட்டிகளோடு அங்கே ஓடினார்கள்.
மலசர்களும், “சாமி, நீங்கள் எல்லாம் குகைக்குள் இருந்துகொள்ளுங்கள். நாங்கள் யார் வந்தாலும் அவர்களை ஒரு கை பார்த்து விடுகிறோம்” என்று குகையில் அந்த ஊரார் இருப்பதற்கு அன்போடு இடம் கொடுத்தார்கள். அத்துடன், ஒவ்வொருவரும் ஒரு பெரிய தடியைக் கையில் வைத்துக்கொண்டு, குகைகளுக்கு முன்னால் காவலாக நின்றார்கள்.
அவர்களுடைய அன்பைக் கண்டு அந்த ஊரார் ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள் குகைகளிலேயே அவர்