பக்கம்:தமிழ் வளர்கிறது.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தமிழ் வளர்கிறது!

தாய்போன்ற பெண்ணொருத்தி தன்னைச் சுட்டித்
தடித்தனமாய் அவள்வந்தாள் இவள்போ னாளென்
றோயாமல் எழுதுவதும். இலக்க ணத்தில்
உள்ளபடி தானெழுது கின்றோ மென்று
வாயாலே அடிப்பதுவும் சான்றோர் சொல்லை
மறுப்பதுவும் தொழிலான சிற்றி னத்தார்
தாயான தமிழ்நாட்டின் விடுத லைக்கே
தாமுழைக்க வந்ததுவாய்க் கூவு கின்றார் !

ஆங்கிலத்தில் கணக்கெழுதும் வேலை பார்ப்போன்
அவரசத்தில் ஒருபிழையை எழுதி விட்டால்
பாங்கினிலே பணிசெய்யத் தகுதி யில்லை
படிப்பில்லை என்றவனை விலக்கி வைப்பார் !
ஓங்கிவளர் தமிழ்மொழியில் கலைப டைப்போர்
உண்டுபண்ணும் பெரும்பிழைகள் ஒன்றி ரண்டா?
ஈங்கிதனைக் கூறிடவோர் ஆளும் இல்லை
எழுத்தாளர் பிழைத்தமிழும் கொழுத்துப்
போச்சாம் !

அரைப்படிப்புக் காரரெல்லாம தமிழ்வ ளர்க்கும்
ஆர்வமுள்ள எழுத்தாள ராகி விட்டார் !
திரைப்படத்தின் எழுத்தாள ரெல்லா மிந்தத்
திருநாட்டில் அறிஞர்களாய் உலவு கின்றார் !
உரைப்படிப்புப் பண்டிதரோ புதுமை யென்றால்
ஒதுங்குகின்றார் ! நூற்பொருளில் திருத்தம்
சொன்னால்
கறைப்படுத்தி விட்டோமென் றலறு கின்றார் !
காண்பதெல்லாம் விந்தைகளே ! தமிழர் நாட்டில்.