பக்கம்:தமிழ் வளர்கிறது.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பாரதியார்

கரும்புவிளை தோட்டத்தில் அரும்பு போன்ற
கைவிரல்கள் நோவெடுக்க வேலை செய்யும்
திருநாட்டின் மாதர்நிலை கண்டு கண்ணீர்
சிந்திகின்றான். தொண்டுசெய்யும் சிப்பாய்க் கஞ்சிப்
பெருமக்கள் ஓட்டமெடுத் தொளிந்து வாழும்
பேடிநிலை, பேய்,பூதம், பிசாசு போன்ற
வெறும்எண்ணத் தோற்றத்திற் கெல்லாம் அஞ்சி
வீழடிமை நிலைபோக்கத் திட்டமிட்டான்.

வாக்கினிலே உறுதியில்லை, செய்கை தன்னில்
வலிவில்லை, மாற்றானை எதிர்த்தொ ழிக்க
ஊக்கமில்லை, ஒற்றுமையோ சற்று மில்லை,
உயிரடிமை ஆய்விட்டார் எனினு மிங்கே.
மேற்குதனைத் தொழுபவரும் கிழக்கு நோக்கி
மெய்வணக்கம் செய்பவரும் உரிமை போன
தாக்குமெனத் தமக்குள்ளே தாக்கி மாய்வார்
தம்மடிமை நிலைபோக்க நினைக்க மாட்டார் !

கவிதையினாற் செந்தமிழிற் புரட்சி சேர்த்த
கவியரசன் பாரதியின் கருத்தில் இந்தச்
சுவையற்ற வாழ்க்கைநிலை போக்கும் எண்ணம்
தோன்றியதே நொடிதோறும் தோன்றி யிந்தக்
கவைக்குதவா வாழ்வுதனை மாற்ற உன்றன்
கவிதையினைப் பயன்படுத்து கவின்சேர் வாழ்வைப்
புவியிலுன்றன் தாய்நாடும் பெற்று வாழ்ந்து,
புதுநலத்தைச் சுவைக்குமெனக் கூறிற் றாமே !