“சும்மா மிரட்டப் பார்க்காதே. கடைசியில் கம்பி எண்ண வேண்டிவரும்” என்றான் சுந்தரம். தங்கமணியும் கண்ணகியும் அந்த நால்வரையும் திருடர்கள் என்று குற்றம் சாட்டினார்கள்.
வாக்கு வாதம் வளர்ந்தது. அந்த முரடர்கள் இவர்களைச் சுலபமாக கட்டிப் பிடித்துக் கொண்டார்கள். இவர்களால் அவர்கள் பிடியிலிருந்து தப்பவே முடியவில்லை.
நான்கு பேரும் ஏதோ தங்களுக்குள் பேசிக்கொண்டு பாதாளச் சிறையின் மேல் பக்கத்திலுள்ள மரக்கதவைத் திறந்து அவர்களை உள்ளே தள்ளி மறுபடியும் கதவை மூடி விட்டார்கள்.
நல்ல வேளையாக உள்ளே மணல் நிறையப் போட்டிருந்ததால் ஆறடி ஆழத்திற்கு விழுந்தாலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தங்கமணியை உள்ளே தள்ளுவதற்கு முன்பு அவன் ஜின்காவுக்கு சைகை செய்துவிட்டான். அத்துடன் பின்னால் தள்ளப்பட்ட சுந்தரத்தையும், கண்ணகியையும் சாமர்த்தியமாகப் பிடித்து அவர்களுக்கு எவ்விதமான காயமும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டான்.
இதுவரையிலும் நடந்த விஷயங்களை யெல்லாம் ஜின்கா, ஒரு மரத்தின் மீது அமர்ந்தபடியே பார்த்துக் கொண்டிருந்தது.
அந்த நான்கு முரடர்களும் தானியக் கிடங்கில் இறங்கி மறைந்தார்கள், அதுவரையிலும் பதுங்கியிருந்த ஜின்கா உடனே தங்கமணி கொடுத்த சம்புடத்தை வாயில் போட்டுக் கொண்டு தாவித் தாவி கீழே வேகமாக இறங்கியது. பாட்டியின் வீடு வந்ததும் அந்த சம்புடத்தில் இருந்த கடிதத்தைப் பாட்டியிடம் எடுத்துக் கொடுத்தது.
42