பக்கம்:சங்ககிரிக் கோட்டையின் மர்மம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“ஏன்? குகையின் ரகசியப் பாதையைப் பற்றி முதலில் தெரிய வேணுமோ?” என்று கேட்டான் சுந்தரம்.

“எனக்கென்னவோ அப்படி ஒரு ரகசியப் பாதை இருக்குமென்றே தோன்றவில்லை. இருந்தாலும் சுற்றிப்பார்ப்பது நல்லது” என்றான் தங்கமணி.

“சரி, ஷெர்லக் ஹோம்ஸ் வார்த்தைக்கு அப்பீல் இல்லை. நீ பிடித்தால் ஜின்கா பிடிதானே” என்றான் சுந்தரம்.

“என்னடா, குரங்குப் பிடி என்ற சொல்கிறாய்?” என்று கோபித்துக் கொண்டாள் கண்ணகி.

“அம்மா, கண்ணகி உனக்குக் கோபம் வந்தால் உலகமே தீப்பட்டு அழிந்து போகுமே - கொஞ்சம் கோபத்தைத் தணித்துக் கொள்” என்று கூறி நகைத்தான் சுந்தரம்.

இவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு ரசித்துக் கொண்டே கண்ணுப்பாட்டி அவர்களிடம் வந்தாள்.

“நாளைக்கு கிரிவலம் வரப் போகிறோம்” என்று முந்திக் கொண்டான் சுந்தரம்.

“அப்படியா? சங்ககிரி மலையைச் சுற்றி வருவதென்றால் ரொம்ப தூரம் நடக்க வேண்டுமே - வழியும் சரியாக இராது வேண்டுமானால் காட்டு மாரியம்மன் கோயில்வரை போய் வரலாம்” என்றாள் பாட்டி.

“காட்டு மாரியம்மனா? அங்கே ஏதாவது விசேஷம் உண்டா?” என்று ஆவலோடு கேட்டான் தங்கமணி.

“அந்தக் கோயிலைப் பற்றி என்ன வெல்லாமோ சொல்லுவார்கள். அதற்குள்ளே ஒரு குகை இருக்கிறதாம். அந்தக் குகைக்கும் சங்ககிரி மலைமேலுள்ள குகைக்கும் வழி இருக்கிறதாம். ஆனால் இதை யெல்லாம் யாரும் பார்த்ததில்லை” என்றாள் பாட்டி.

18