பக்கம்:தாவிப்பாயும் தங்கக் குதிரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

அங்கு ஒர் உழவனிடம் வேலைக்குச் சேர்ந்து கொண்டார்.

உழைத்துப் பிழைக்க வேண்டிய ஏழையாக மாறிவிட்ட போதிலும் அரசர் தன்மகன் வெற்றி வேலனை ஓர் இளவரசனை வளர்க்க வேண்டிய முறை தப்பாமல் வளர்த்து வந்தார். தமக்கு ஓய்விருந்த போதெல்லாம் அவனுக்குக் கல்வியும், கலையும், வாட்பயிற்சியும், வேற்பயிற்சியும் கற்றுக் கொடுத்தார்.

வெற்றிவேலன் வலிவும் பொலிவும் உடைய இளைஞனாக வளர்ந்துவிட்டான். ஆற்றலும் வீரமும் அஞ்சா நெஞ்சும் கொண்ட காளை போல் அவன் தோன்றினான். எந்தச் செயலிலும் வெற்றி காணக் கூடிய தனித் திறமை தன் மகனுக்கு வந்துவிட்டது என்பதை அரசர் கண்டு கொண்டார். இனி இவனை நாம் இங்கே வைத்திருக்கக் கூடாது என்று அவர் முடிவு கட்டினார்.