பக்கம்:சங்ககிரிக் கோட்டையின் மர்மம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நான் கொண்டுள்ள ஆவலால் உந்தப்பட்டு எழுதும் நீண்ட கதைகளிலே இது இரண்டாவதாகும். கொல்லிமலைக் குள்ளன் என்ற முதற்கதையில் வருகின்ற அதே தங்கமணி, சுந்தரம், கண்ணகி ஆகிய மூவரும் இக்கதையிலும் முக்கிய பாத்திரங்களாக வருகின்றனர். தங்கமணி அன்புடன் வளர்த்து வருகின்ற ஜின்கா என்ற குரங்கும். இக்கதையிலும் வந்து பல சாகசங்களைச் செய்கின்றது. தங்கமணிக்கு ஜின்கா எப்படிக் கிடைத்தது? அதை அவன் எவ்வாறு வளர்த்தான்? இவற்றைப் பற்றியெல்லாம் முதற் கதையிலே விரிவாக எழுதியிருக்கிறேன். இணை பிரியாத இந்த நால்வரையும் வைத்து மேலும் பல கதைகள் எழுத எண்ணியுள்ளேன்.

திப்புசுல்தான் கட்டிய கோட்டையை இன்றும் சங்ககிரியில் கண்டு மகிழலாம். அவனுடைய தேசபக்திக்கும், வீரத்திற்கும், முன்யோசனைக்கும் இதுவும் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.

இனிக் கதையைப் படியுங்கள். இதற்குமேல் நீண்ட முன்னுரை என்றால் உங்களுக்கும் பிடிக்காது. ஜின்கா தன் திறமைகளைக் காட்டத் தயாராக இருக்கிறது. வேறு என்ன வேண்டும்?

கடைசியாக ஒரு வார்த்தை . இக்கதையை நூல் வடிவத்திலே அழகாக வெளிக்கொணர்ந்த மாக்மில்லன் கம்பெனியாருக்கு எனது நன்றி உரியது.

சென்னை
பெ. தூரன் 25-11-78