திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/எபிரேயருக்கு எழுதிய திருமுகம்/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து
"பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார். கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்." (எபிரேயர் 1:1-3)

எபிரேயருக்கு எழுதிய திருமுகம் (Hebrews) [1][தொகு]

முன்னுரை

பவுலுடன் தொடர்புப்படுத்தப்படும் இறுதியான திருமுகம் இந்த எபிரேயர் திருமுகம். இது ஒரு திருமுகம் என வழங்கப்பட்டாலும், இதில் திருமுக அமைப்பு இல்லை; மாறாக ஓர் இறையியல் கட்டுரையாகவே இது அமைந்துள்ளது. நூலின் இறுதியில் மட்டும் வாசகர்களுக்கு அறிவுரைகள் தரப்பட்டுள்ளன.

ஆசிரியர்[தொகு]

எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திற்கும் பவுலின் திருமுகங்களுக்கும் இடையே ஒற்றுமைகள் இருப்பினும் வேற்றுமைகள் மிகுதியாக இருப்பதால் இத்திருமுகத்தைப் பவுல் எழுதியிருக்க இயலாது என அனைவரும் இப்போது ஒருமனதாக ஏற்றுக்கொள்கின்றனர். அப்பொல்லோ எழுதியிருக்கலாம் என்பர் சிலர். இருப்பினும் யாரால் எழுதப்பட்டது என்னும் கேள்விக்குத் தெளிவான விடை காண இயலவில்லை.

சூழலும் நோக்கமும்[தொகு]

இத்திருமுகம் யூதக் கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்டதாகும். அவர்கள் பழைய ஏற்பாட்டில் தோய்ந்தவர்கள்; தங்கள் நம்பிக்கையில் தளர்ச்சி ஏற்பட்டு, நம்பிக்கையை இழந்துவிடக்கூடிய ஆபத்தில் இருந்தவர்கள். அவர்கள் கிறிஸ்தவ நம்பிக்கையில் உறுதியாய் நில்லாமல் மீண்டும் யூதச் சமயத்திற்குத் திரும்ப நினைத்தார்கள்; தாங்கள் பெற்றுக்கொண்ட நற்செய்தியை யூதமயமாக்க விரும்பினார்கள் (கலா 2:14). ஒருவேளை இந்த வாசகர்களில் பலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட யூதக் குருக்களாகவும் இருக்கலாம் (திப 6:7).

இத்திருமுகத்தில் எருசலேம் கோவில் மற்றும் அதன் வழிபாடுகள் நிகழ்காலத்தில் விரிவாகத் தரப்படுவதால் கி.பி. 70இல் நடந்த எருசலேம் கோவில் அழிவுக்கு முன்னர் இது எழுதப்பட்டது என்பர் சிலர்.

ஆயினும் இக்கருத்தைப் பலர் ஏற்றுக்கொள்வதில்லை. ஏனெனில் கோவிலும் அதன் வழிபாடுகளும் கிறிஸ்துவின் செயல்களுக்கும் தன்மைக்கும் முன் அடையாளமாக மட்டுமே தரப்படுகின்றன. தன்னிலேயே அவற்றை விளக்குவது ஆசிரியரின் நோக்கமல்ல. திருமுகம் கி.பி. 80ஆம் ஆண்டிலிருந்து 85ஆம் ஆண்டுக்குள் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றே எல்லாரும் நம்புகின்றனர்.

உள்ளடக்கம்[தொகு]

கிறிஸ்துவின் மேன்மையே இந்நூலின் மையக் கருத்தாகும். முன்னுரையில் கிறிஸ்து முழுமையான, முடிவான வெளிப்பாட்டைத் தருகிறார் எனக் கூறப்பட்டுள்ளது. இறைவாக்கினருக்கும் வானதூதருக்கும் பழைய உடன்படிக்கையின் இணைப்பாளரான மோசேக்கும் மேலானவராகக் கிறிஸ்து காட்டப்படுகிறார். கிறிஸ்துவின் குருத்துவம் பழைய ஏற்பாட்டுக் குருத்துவத்தினின்று முற்றிலும் மாறுபட்டதும் அதற்கு மேம்பட்டதுமாகும் எனச் சுட்டிக் காட்டப்படுகிறது. ஏனெனில் கிறிஸ்துவின் குருத்துவம் பழைய ஏற்பாட்டின் வாக்குறுதியை நிறைவு செய்கிறது (8:1-13); கிறிஸ்துவின் பலியும் எக்காலத்துக்கும் உரிய ஒரே பலியாய் விளங்கி, பழைய ஏற்பாட்டுப் பலிகளை நிறைவுசெய்கிறது; கிறிஸ்துவின் சாவு, உயிர்பெற்றெழுதல், விண்ணேற்றம் ஆகியன விண்ணகத் தூயகத்தை நமக்குத் திறந்து வைத்துள்ளன என்னும் கருத்துகள் வலியுறுத்தப்படுகின்றன.

இத்தகைய காரணங்களினால், கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டோர் கிறிஸ்துவை விட்டு மீண்டும் யூத முறைக்குத் திரும்பலாகாது என்று கேட்டுக்கொள்கிறார் ஆசிரியர்; அவ்வாறு செய்தால் பாலைவனத்தில் கிளர்ச்சி செய்த இஸ்ரயேலர் போல் இவர்களும் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கிறார்.


எபிரேயர்[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முன்னுரை: கடவுள் தம் மகன் மூலமாக

நம்முடன் பேசியுள்ளார்

1:1-3 414
2. கடவுளின் மகன் வானதூதர்களைவிட

மேலானவர்

1:4 - 2:18 414 - 416
3. இயேசு கிறிஸ்து மோசேக்கும்

யோசுவாவுக்கும் மேலானவர்

3:1 - 4:13 416 - 418
4. இயேசு கிறிஸ்துவின் குருத்துவத்தின் மேன்மை 4:14 - 7:28 418 - 421
5. இயேசு கிறிஸ்துவின் உடன்படிக்கையின் மேன்மை 8:1 - 9:28 422 - 424
6. இயேசு கிறிஸ்துவின் பலியின் மேன்மை 10:1-39 424 - 426
7. நம்பிக்கையின் மேன்மை 11:1 - 12:29 427 - 431
8. கடவுளுக்கு உகந்த வாழ்க்கை 13:1-19 431 - 432
9. இறுதி வாழ்த்துரை 13:20-21 432
10. முடிவுரை 13:22-25 432

எபிரேயர் (Hebrews)[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1[தொகு]

1. முன்னுரை[தொகு]

கடவுள் தம் மகன் மூலமாக நம்மிடம் பேசியுள்ளார்[தொகு]


1 பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில்
இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள்,
2 இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்;
இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்;
இவர் வழியாக உலகங்களைப் படைத்தார்.
3 கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும்,
அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர்,
தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார்.
மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தியபின்,
விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.

2. கடவுளின் மகன் வானதூதரைவிட மேலானவர்[தொகு]


4 இவ்வாறு இறைமகன் வான தூதரைவிடச் சிறந்ததொரு பெயரை
உரிமைப்பேறாகப் பெற்றார்.
அந்நிலைக்கு ஏற்ப அவர்களைவிட இவர் மேன்மை அடைந்தார்.


5 ஏனெனில், கடவுள் வானதூதர் எவரிடமாவது


"நீ என் மைந்தர்;
இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்"


என்றும்,


"நான் அவருக்குத் தந்தையாயிருப்பேன்,
அவர் எனக்கு மகனாயிருப்பார்"


என்றும் எப்போதாவது கூறியதுண்டா? [1]


6 மேலும் அவர் தம் முதற்பேறான இவரை உலகிற்கு அனுப்பியபோது,


"கடவுளின் தூதர் அனைவரும்
அவரை வழிபடுவார்களாக"


என்றார். [2]


7 வானதூதரைக் குறித்து அவர்


"தம் தூதரைக் காற்றுகளாகவும்
தம் பணியாளரைத் தீப்பிழம்புகளாகவும் செய்கிறார்"


என்றார். [3]


8 தம் மகனைக் குறித்து,


"இறைவனே, என்றுமுளது உமது அரியணை;


உம் ஆட்சியின் செங்கோல் வளையாத செங்கோல்.
9 நீதியே உமது விருப்பம்; அநீதி உமக்கு வெறுப்பு;
எனவே கடவுள், உமக்கே உரிய கடவுள்,
மகிழ்ச்சியின் நெய்யால் உம்மீது அருள்பொழிவு செய்து


அரசத் தோழரினும் மேலாய் உயர்த்தினார்"


என்றார். [4]


10 மீண்டும்,


"ஆண்டவரே, நீர் தொடக்கத்தில்


பூவுலகுக்கு அடித்தளம் இட்டீர்.
விண்ணுலகம் உமது கைவினைப் பொருள் அன்றோ!
11 அவையோ அழிந்துவிடும்; நீரோ நிலைத்திருப்பீர்.
அவையெல்லாம் ஆடைபோல் பழமையாகும்;
12 போர்வையைப்போல் அவற்றை நீர் சுருட்டிவிடுவீர்;
ஆடையைப்போல் அவற்றை மாற்றிவிடுவீர்.
நீரோ மாறாதவர்!


உமது காலமும் முடிவற்றது"


என்றார் அவர். [5]


13 மேலும், கடவுள், வானதூதர் எவரிடமாவது, எப்போதாவது,


"நான் உம் பகைவரை உமக்குக்


கால்மணையாக்கும் வரை


நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்"


என்று கூறியதுண்டா? [6]


14 அவர்கள் அனைவரும் ஊழியம் புரியும் ஆவிகள் அல்லவா?
மீட்பை உரிமைப்பேறாகப் பெறவிருப்போருக்குத்
தொண்டாற்ற அனுப்பப்பட்டவர்கள் அல்லவா?


குறிப்புகள்

[1] 1:5 = திபா 2:7; 2 சாமு 7:14; 1 குறி 17:13.
[2] 1:6 = திபா 97:7.
[3] 1:7 = திபா 104:4.
[4] 1:8,9 = திபா 45:6,7.
[5] 1:10-12 = திபா 102:25-27.
[6] 1:13 = திபா 110:1.


அதிகாரம் 2[தொகு]

ஒப்பற்ற மீட்பு[தொகு]


1 எனவே, நாம் கேட்டறிந்த செய்தியினின்று வழுவிவிடாதிருக்குமாறு,
மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


2 ஏனெனில் வானதூதர்வழி எடுத்துரைக்கப்பட்ட செய்தி உறுதியாயிருந்தது.
அதை மீறிய எவரும், அதற்குக் கீழ்ப்படியாத எவரும் தகுந்த தண்டனை பெற்றனர்.
3 அவ்வாறிருக்க, இத்தகைய ஒப்பற்ற மீட்பைப்பற்றி நாம் அக்கறையற்றிருப்போமானால்,
தண்டனையிலிருந்து எப்படி தப்பமுடியும்?
இம்மீட்புச் செய்தியை முதன்முதல் அறிவித்தவர் ஆண்டவரே.
இதைக் கேட்டவர்களும் இதனை நமக்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.
4 கடவுளும் அடையாளங்கள், அருஞ்செயல்கள்,
பல்வேறு வல்ல செயல்கள் மூலமாகவும்,
தம் திருவுளப்படி தூய ஆவியின் கொடைகளைப் பகிர்ந்தளித்ததன் மூலமாகவும்
இதற்குச் சான்று பகர்ந்துள்ளார்.

கிறிஸ்து நம் மீட்பர்[தொகு]


5 வரவிருக்கும் உலகு பற்றிப் பேசுகிறோம்.
கடவுள் அதனை வானதூதரின் அதிகாரத்திற்குப் பணியச் செய்யவில்லை.
6 இதற்குச் சான்றாக மறைநூலில் ஓரிடத்தில் சொல்லப்பட்டுள்ளது இதுவே:


"மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்?


மனிதப் பிறவிகளை நீர் ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு
அவர்கள் எம்மாத்திரம்?
7 ஆயினும் நீர் அவர்களை வானதூதரை விடச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்;
மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.
உமது கை படைத்தவற்றுக்கு மேலாக அவர்களை நியமித்தீர்.


8 எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர்."


அனைத்தையும் மனிதருக்கு அடிபணியச் செய்தார் என்பதால்,
எதையும் பணியாதிருக்க விட்டுவிடவில்லை எனலாம்.
எனினும், அனைத்தும் மனிதருக்கு இன்னும் அடிபணியக் காணோம். [1]
9 நாம் காண்பதோ
சிறிது காலம் வானதூதரைவிடச்
சற்றுத் தாழ்ந்தவராக்கப்பட்ட இயேசுவையே.
இவர் துன்புற்று இறந்ததால்,
மாட்சியும் மாண்பும் இவருக்கு முடியாகச் சூட்டப்பட்டதைக் காண்கிறோம்.
இவ்வாறு கடவுளின் அருளால் அனைவருடைய நலனுக்காகவும்
இவர் சாவுக்கு உட்பட வேண்டியிருந்தது.
10 கடவுள் எல்லாவற்றையும் தமக்கென்று தாமே உண்டாக்கினார்.
அவர், மக்கள் பலரை மாட்சியில் பங்குகொள்ள அழைத்துச் செல்ல விரும்பியபோது,
அவர்களது மீட்பைத் தொடங்கி வழி நடத்துபவரைத்
துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார். இது ஏற்ற செயலே.


11 தூய்மையாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும்
உயிர்முதல் ஒன்றே.
இதனால் இயேசு இவர்களைச் சகோதரர் சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை.


12 "உமது பெயரை என் சகோதரர் சகோதரிகளுக்கு அறிவிப்பேன்;
சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்"


என்று கூறியுள்ளார் அன்றோ! [2]


13 மேலும்,


"நான் அவர்மேல் என் நம்பிக்கையை
நிலை நிற்கச் செய்வேன்"


என்றும்,


"இதோ, நானும் கடவுள் எனக்கு
அளித்த குழந்தைகளும்"


அவ்வாறு செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார். [3]


14 ஊனும் இரத்தமும் கொண்ட அப்பிள்ளைகளைப் போல்
அவரும் அதே இயல்பில் பங்கு கொண்டார்.
இவ்வாறு சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச்
சாவின் வழியாகவே அழித்து விட்டார்.
15 வாழ்நாள் முழுவதும் சாவுபற்றிய அச்சத்தினால் அடிமைப்பட்டிருந்தவர்களை விடுவித்தார்.
16 ஏனெனில் அவர் வானதூதருக்குத் துணை நிற்கவில்லை.
மாறாக, ஆபிரகாமின் வழிமரபினருக்கே துணை நின்றார் என்பது கண்கூடு.
17 ஆதலின், கடவுள் பணியில் அவர் இரக்கமும், நம்பிக்கையும் உள்ள தலைமைக் குருவாயிருந்து, மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு
எல்லாவற்றிலும் தம் சகோதர் சகோதரிகளைப்போல் ஆக வேண்டிதாயிற்று.
18 இவ்வாறு தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால்
சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர் வல்லவர்.


குறிப்புகள்

[1] 2:6-8 = திபா 8:4-6.
[2] 2:12 = திபா 22:22.
[3] 2:13 = எசா 8:17,18.


(தொடர்ச்சி): எபிரேயருக்கு எழுதிய திருமுகம்: அதிகாரங்கள் 3 முதல் 4 வரை