பக்கம்:கோவூர் கிழார்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

யும் எத்தனை நாளைக்கு நிற்கும்? ஊருக்குப் போனவுடன் அவனுடைய நண்பர்கள் அவனுக்கு வேறு வகையில் உரை ஏற்றினார்கள். “கைக்கு வந்தது வாய்க்கு எட்டாமற் போனது போலப் பற்றிக் கொண்ட கோட்டையைக் கைவிடலாமா? எங்களுக்குச் சொல்லியனுப்பியிருந்தால் முற்றுகையிட்டிருந்த படையைத் தாக்கி உங்களுக்குத் துணையாக வந்திருக்கமாட்டோமா? தக்க சமயத்தைக் கைவிட்டுவிட்டீர்களே! இனி இப்படி வேறு காலம் வாய்க்குமா?” என்று கேட்டார்கள்.

சோழ நாட்டில் சோழ மன்னனுக்கு அடங்கிய குறுநில மன்னர்கள் சிலர் இருந்தார்கள். அவர்களை வேளிர் என்று வழங்கினார்கள். அவர்கள் தங்களுக்கென்று சிறிய சிறிய ஊர்களை உரிமையாக வைத்துக்கொண்டு சோழ அரசனுக்குத் திறை அளந்து வாழ்ந்து வந்தார்கள். எப்படியாவது சோழ மன்னனுக்கு அமைதியில்லாமல் செய்ய வேண்டுமென்ற எண்ணமே அவர்களுக்கு இருந்தது. உண்மையில் நலங்கிள்ளியிடத்திலும் அவர்களுக்கு அன்பு இல்லை; நெடுங்கிள்ளியிடத்திலும் அன்பு இல்லை. சோழ நாட்டைச் சோழ மன்னரே ஆண்டு வரவேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு இல்லை. ஆதலால் எப்போதும் குறும்பு செய்து அமைதியைக் கெடுப்பதே அவர்களுடைய வேலையாக இருந்தது. பெருமன்னனுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்வதில் அவர்கள் வல்லவர்கள். அத்தகையவர்களே இப்போது நெடுங்கிள்ளியினிடம் வந்து அவன் நெஞ்சத்தில் ஆறியிருந்த பகைக்கனலை மீட்டும் மூட்டினார்கள்.

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோவூர்_கிழார்.pdf/54&oldid=1111074" இலிருந்து மீள்விக்கப்பட்டது