பக்கம்:கோவூர் கிழார்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73

வருக்குத் துணையாக வருகின்றான் என்ற செய்தியைக் கேள்வியுற்றால் மேலே போரை நடத்தாமல் சந்து செய்துகொள்ளுவார்கள்.

போரில் தமக்கு வெற்றி வாங்கித் தந்த பெரு வீரனுக்கு வேந்தர்கள் வழங்கும் பரிசு கொஞ்சமாகவா இருக்கும்? தமிழ் நாட்டில் எந்த மண்டிலத்தில் உண்டாகும் வளமும் அவனுக்கு எளிதிற் கிடைத்து வந்தது. அவன் யாருக்குப் படைத் துணையாகச் செல்கிறானோ அந்த வேந்தன் தன் நாட்டுப் பொருள்களைத் தருவான். மன்னன் வெற்றி பெறும்போது பகை வேந்தர் தம் நாட்டுப் பொருள்களை அவனுக்குத் திறையாகத் தருவார்கள். அவற்றை, “இவை உன் துணையால் வந்தவை; உனக்கே உரியவை” என்று அம் மன்னன் திருமுடிக் காரிக்கே வழங்குவான். இவ்வாறு எல்லாப் பொருள்களும் காரிக்குக் கிடைத்தன.

கிடைத்த பொருள்களைக் காரி தான் வைத்துக் கொள்வதில்லை. தன்னிடம் வந்தவர்களுக்கு வழங்கிவிடுவான். நல்லிசைச் சான்றோர்களாகிய புலவர்களிடம் அவனுக்கிருந்த மதிப்புக்கும் அன்புக்கும் ஈடு வேறு இல்லை. அவர்களுக்குத் தேரைக் கொடுப்பான்; யானையைக் கொடுப்பான்; பொன்னைக் கொடுப்பான்; வேறு பொருள்களைக் கொடுப்பான். வேந்தர்கள் அவனுக்குத் தந்த தேர்களைப் புலவர்களுக்குக் கொடுத்து அதில் அவர்கள் ஏறிச் செல்வதைக் கண்டு மகிழ்வான். கணக்கில்லாத தேர்களை அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோவூர்_கிழார்.pdf/78&oldid=1111118" இலிருந்து மீள்விக்கப்பட்டது