பக்கம்:இறைவர் திருமகன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2. அரசனைத் தேடிய அறிஞர்

சில மாதங்கள் கழிந்தன. ஜெருசலம் நகரின் வீதிகளின் வழியாக மூன்று அன்னியர்கள் சென்றார்கள். அவர்கள் அழகான ஆடைகள் அணிந்திருந்தார்கள். ஒட்டகங்களில் ஏறிச் சென்றார்கள். பணியாட்கள் சிலரும் அவர்களுடன் சென்றார்கள். அந்தப் பெரிய மனிதர்கள் கீழ்த் திசையிலிருந்து வந்தார்கள். அவர்களைப் பார்த்த போதே சிறந்த அறிஞர்கள் என்று தெரிந்து கொள்ள முடிந்தது, அவர்கள் தங்கள் முன் எதிர்பட்டவர்களை யெல்லாம், "யூதர்களின் அரசனாகப் பிறந்திருக்கும் அந்தக் குழந்தை எங்கே?" என்று கேட்டார்கள். அந்தக் குழந்தையின் நட்சத்திரத்தை நாங்கள் கீழ்த்திசையிலே கண்டோம். அவனைத் தொழுது செல்வதற்காக வந்திருக்கிறோம்" என்று கூறினார்கள்.