பக்கம்:இறைவர் திருமகன்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

கடவுளின் பிள்ளை என்றும் இறையரசு நிறுவ வந்த திருமகன் என்றும் பெருமையாகப் பேசப்படுகின்ற இயேசு நாதரின் கதை இது. இயேசுநாதரின் வரலாறு கேட்டால் நெஞ்சம் உருகும். உலகில் ஏழைஎளியவர்களுக்காகவும், உண்மையான கடவுள் நம்பிக்கையை வளர்ப்பதற்காகவும் அவர் அடைந்த துன்பங்களின் தொகுப்பே அவருடைய வாழ்க்கையாகும். மனித குலத்தின் உயர்வுக்காகத் தம் துன்பங்களைப் பொருட்படுத்தாது, அன்பு அரசு ஒன்றை நிலைநிறுத்த வந்த இயேசுநாதரின் கதையை ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும்.

சிறு குழந்தைகள் இந்நூலைப் படிப்பதால், தெளிவான இறையுணர்வும், பாகுபாடற்ற மனித இன ஒருமைப்பாட்டுணர்வும், அன்புணர்வும், இரக்க நெஞ்சும் உடையவர்களாக மாறுவார்கள் என்பது திண்ணம்.

எளிய அழகிய தமிழ் நடையில் திரு நாரா நாச்சியப்பன் இந்நூலை வழங்கியிருக்கிறார். ஆசிரியர்களும் பெற்றோர்களும் தம் பிள்ளைகளுக்கு இந்நூலே வாங்கியளிப்பதன் மூலம் தம் மக்களிடத்தே நல்லியல்புகளை வளர்த்திட முடியும்.


—தமிழாலயம்