பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடிகளின் தோற்றம்

63


அணுக்குண்டு அவனுடைய அறிவின் வெற்றி. ஆனால் அழிக்கும் படையாகவே அதைப் பயன்படுத்த அவன் முதலில் எண்ணுகிறான். அணுவையும் பிளக்க முடியும் என்ற எண்ணம் பிறக்கும்போதே அதை வலிமை மிக்க அழிவு வேலைப் படையாக்கலாம் என்ற விலங்கு உணர்ச்சியும் கூடவே பிறக்கின்றது. ஆண்மை பெண்மை என்ற இரு சக்திகளின் கூறாக உலகம் அமைந்திருக்கிறது. இதையே நாம் மங்கையோர் பாகங் கொண்ட இறைவன் வடிவத்தில் உருவகமாகக் குறிக்கின்றோம். அவ்விரு சக்திகளும் அண்டங்களை இயக்குகின்றன. மனிதனுக்குள்ளும் அவைகளே பலதிறப்பட்ட தன்மைகளாக விரிந்து நின்று தொழில் செய்கின்றன. அவைகளில் ஒன்று ஓங்கி, மற்றொன்று தாழ்கின்றபோது உலகில் தொல்லைகளே மிஞ்சும். ஆண்மை என்பதிலே வேறு பல பண்புகளை நாம் குறிக்கிறோம். பெண்மை என்பதிலே வேறு பல பண்புகளை நாம் குறிக்கிறோம். அவை முறையே ஆணிடத்தும்பெண்ணிடத்தும் உள்ளவைஎன்பதல்ல.. அவை எல்லோரிடத்திலும் பால் வேற்றுமையின்றி அமைந்துள்ள தன்மைகள். இயல்பாலும், பழக்கத்தாலும் ஆணிடத்துச் சில அதிகமாகத் தோன்றலாம். பெண்ணிடத்து வேறு சில அதிகமாகத் தோன்றலாம். ஆனால், அவை இரண்டும் ஏதாவது ஒரு விகிதத்தில் சேர்ந்து அமைந்ததே மக்கள் கூட்டம்.

நாம் ஆண்மையை வளர்ப்பதில் அதிகக் கவனம் செலுத்திக் கொண்டிருந்துவிட்டோம். இல்லை, இல்லை. அப்படிச் சொல்வது தவறு; ஆண்மையிலுள்ள கீழ்த் தர விலங்குத் தன்மையைக் களைந்தெறிவதில் கவனம்