பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

"சரி, உன் துப்பறியும் வேலையை ஆரம்பித்துவிட்டாயா? இன்னும் என்ன கண்டு பிடித்திருக்கிறாய்?

"அந்த சிங் தமிழ் பேசியது வேடிக்கையாக இருந்தது.”

இவ்வாறு தங்கமணியும் சுந்தரமும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்த கண்ணகிக்கு மேலும் மௌனமாக இருக்க முடியவில்லை.

"சுந்தரம், யார் அந்த சிங்?" என்று அவள் கேட்டாள். "அவர் தான், அந்தப் பனைமரம்" என்றான் சுந்தரம்.

"அவர் ஒரு பஞ்சாப்காரர். பொம்மைக்கூத்து கோஷ்டி ஒன்றை இங்கே அழைத்து வந்திருக்கிறாராம். எழும்பூர் பொருட்காட்சி சாலை அரங்கத்திலே பொம்மைக்கூத்து நடக்கிறதாம். நமக்கெல்லாம் இலவசமாக அனுமதிச்சீட்டுக் கொடுப்பதாகச் சொன்னார்" என்று விளக்கினான் தங்கமணி.

"பொம்மைக்கூத்தா? எனக்கு ரொம்பப் பிடிக்கும் ; நானும் வரேன். அண்ணா " என்று கண்ணகி தன் ஆசையை வெளியிட்டாள்.

"அதோ, அவரே வந்துவிட்டார்" என்று கத்தினான் சுந்தரம்.

"அப்பா இருக்காங்கோ?" என்று கேட்டுக்கொண்டே அந்த நெட்டை மனிதர் வீட்டிற்குள்ளே நுழைந்தார். அவருடைய பெரிய தலைப்பாகையும், உடம்பெல்லாம் மறைக்கும் 'தொளதொள' ஜிப்பாவும் கால்சட்டையும் அவரை ஒரு பட்டாணியர் என்று நினைக்கும்படி செய்தது. ஆனால், நிறம் மட்டும் கொஞ்சம் கறுப்பு. இரண்டு கைகளையும் மணிக்கட்டு வரையில் அவர் நன்றாக மறைத்திருந்தார். சுந்தரம், கண்ணகி, தங்கமணி ஆகிய மூவரும் பின்னால் மெதுவாகச் செல்லத் தொடங்கினர். "ஜின்கா, வாடா! நீச்சல் குளத்திற்குக் கூட்டிக்கொண்டு போகவில்லை என்ற கோபம் இன்னும் உனக்குத் தீரவில்லையா? குளத்தில்தான் உன்னை விடமாட்டார்களே! பொம்மைக்கூத்துக்கு அழைத்துக்கொண்டு போகிறேன், வா” என்று கூப்பிட்டான் தங்கமணி.

அதுவரையிலும் அசையாமல் மௌனமாகத் திண்ணை மூலையில் படுத்திருந்த குரங்கு ஒன்று, தனது கோபத்தை