பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57

“அவரைக் கண்டுபிடிப்பதற்கும் என் தகப்பனாரின் உதவி வேண்டியிருக்கும். முதலில் அவரைப் பார்த்து நடந்ததையெல்லாம் சொல்லுவோம். பரிசல் இருந்தால் சீக்கிரம் போக முடியும்” என்று கூறிவிட்டு மருதாசலம் வேகமாக நடந்தான்.

“நாங்கள் பரிசலில் தான் வந்தோம்” என்று சுந்தரம் உற்சாகமாகச் சொன்னான்.

“பரிசல்? வேண்டவே வேண்டாம். யாருக்கும் பரிசல்விடத் தெரியாது” என்று அச்சத்தோடு கண்ணகி சொன்னாள்.

“எனக்கு ரொம்ப நன்றாகத் தெரியும். அம்மா, உனக்குப் பயமே வேண்டியதில்லை. பரிசல் இருக்கும் இடத்திற்குப் போவோம்; வாருங்கள்” என்றான் மருதாசலம்.

தங்கமணி வேகமாக முன்னால் சென்று வழிகாட்டினான். ஜின்கா அவன் தோள்மேலே ‘ஜங்’ என்று தாவி ஏறி உட்கார்ந்து கொண்டது.

“இதென்னடா, குரங்கு!” என்று கூறிக்கொண்டே மருதாசலம் அதை விரட்டியடிக்கப் புறப்பட்டான்.

“வேண்டாம் வேண்டாம்; இது நம் ஜின்காதான். அவர்கள் இரண்டு பேரும் அண்ணன் தம்பிகள்” என்று சிரித்தான் சுந்தரம்.

இவ்வாறு பேசிக்கொண்டே பரிசல் இருக்குமிடத்தை அடைந்தார்கள்.

“அடடா! இந்தத் தேங்காய்தான் உங்களுக்குச் சாப்பாடா? பரிசலில் உட்கார்ந்துகொண்டு நீங்கள் தேங்காயை உடைத்துச் சாப்பிடுங்கள். நான் பரிசல் தள்ளுகிறேன்” என்று மருதாசலம் பரிசலை ஆற்றில் மிதக்க விட்டுக்கொண்டே சொன்னான்.

அனைவரும் பரிசலில் ஏறிக்கொண்டனர். மருதாசலம் துடுப்புப் போட்டான். வஞ்சியாறு அந்த இடத்திலிருந்து இரண்டு உயரமான மலைகளின் இடையிலே ஏதோ ஒரு குகைக்குள் நுழைவது போல நுழைந்து சென்றது. ஆறு வளைந்து சென்றதால் எதிரிலேயும் ஒரு மலையின் பகுதியே உயர்ந்து காட்சியளித்தது. சுற்றிலும் உயரமான மரங்கள் மலைச்சாரல்களிலே ஓங்கி வளர்த்து நின்றன. அவற்றிற்கிடையிலே அந்த நேரத்திலும் இருட்டாகத்தான் தோன்றியது.