பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

காட்டு வழிதனிலே

ஒன்று கூறியுள்ளார்: “தெளிவாகவும் தர்க்க முறையிலும் நினைத்துப் பழகவேண்டும் என்று போதிக்கப் பல ஆண்டுகளாக நான் முயன்று வருகிறேன். ஆனால், பெரும்பான்மையான அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ள விரும்புவதில்லை” என்று அவர் அங்கலாய்க்கிறார், அரசியல்வாதிகள் இவ்வாறிருந்தால் உலகத்தில் அமைதியோ, இன்பமோ நிலைக்க முடியாது. அவர்களுக்கு அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலேதான் நாட்டமெல்லாம்.

உள்நாட்டு வியவகாரம் இவ்வாறென்றால் வெளிநாடுகளோடு கொண்டுள்ள தொடர்பிலும் இந்த அதிகார மோகமே தலைவிரித்தாடுகிறது. வல்லரசு ஒவ்வொன்றிற்கும் தனது கை ஓங்குவதிலேயே கண்ணும் கருத்தும். கையாளும் முறை நல்லதா, கெட்டதா என்பது பற்றிக் கவலையே இல்லை. அதற்காக எத்தனை பொய்ப் பிரசாரங்களும் செய்யத் தயார். சிறு நாடுகளெல்லாம் இவ் வல்லரசுகளின் கைப் பொம்மைகள். சமயத்திற் கேற்றவாறு எப்படி வேண்டுமானாலும் அவற்றை ஆட்டிக்கொள்ளலாம்.

இரண்டாவது உலகயுத்தம் முடிவடைந்த சிறிது காலத்திற்குள்ளேயே உலகம் இரு பெருங் கட்சிகளாகப் பிரியத் தொடங்கிவிட்டது. அணுக்குண்டின் அழிவுச் சக்தியை அறிந்த பின்னரும் தங்கள் விருப்பு வெறுப்புக்களை விட்டுத் தர்க்க முறையில் நினைக்க அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ளவில்லை. அதனல் தான் மற்றுமொரு உலக யுத்தம் தொடங்கியே தீரும் என்கிற எண்ணம் வலுத்துக்கொண்டிருக்