பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
104

வதற்கு முன்பே, போலீஸ் இன்ஸ்பெக்டரும், வடிவேலும் அவன் மேல் பாய்ந்துவிட்டனர். துப்பாக்கியை நீட்டியவாறு போலீஸார் இருவர் அவனை அணுகினர். இனிமேல் தான், செய்யக்கூடியது ஒன்றுமில்லை என்று குள்ளனுக்குத் தெரிந்துவிட்டது. தன்னையே சுட்டுக்கொள்ளவும் முடியாதபடி அவன் கையிலிருந்த துப்பாக்கியை போலீஸார் பிடுங்கிக் கொண்டனர். குள்ளன் கைது செய்யப்பட்டான்.

ஜின்காவிற்கு என்ன ஆயிற்றோ என்று தங்கமணி கதறிக் கொண்டு அதன் அருகில் ஓடினான். சுந்தரம். கண்ணகி, வள்ளி நாயகி முதலியோரும் ஓடினர். ஜின்காவின் மேலே படிந்திருந்த ரத்தத்தைத் துடைத்துவிட்டுத் தங்கமணி கவலையோடு பார்த்தான். மறு கணத்தில் அவன் முகம் மலர்ந்தது.

"இதெல்லாம் குள்ளனின் கையைக் கடித்ததால் பீரிட்ட ரத்தம். ஜின்காவிற்குக் காயம் இல்லை" என்று அவன் உற்சாகத்தோடு கூவினான். அப்படிக் கூவிக்கொண்டே அவன் ஜின்காவைத் தழுவினான்.

"இந்த வெற்றிக்கெல்லாம் ஜின்காதான் காரணம்" என்று தழுதழுத்த குரலில் வள்ளிநாயகி கூறினாள்.

"அத்தை, இன்னொரு குரங்கை மறந்துவிட்டீர்களே!" என்று சுந்தரம் சிரித்துக்கொண்டே சொன்னான். இதற்குள் எல்லாரும் தங்கமணியையும், ஜின்காவையும் சூழ்ந்து கொண்டனர். சுந்தரத்தின் கேலிப்பேச்சைக் கேட்டு அனை வரும் சிரித்தார்கள். கொல்லிமலைக் குள்ளன் மட்டும், "இந்தக் குரங்குகள் இத்தனை பண்ணுமென்று எதிர்பார்க்கவேயில்லை நான்," என்று முணுமுணுத்தான்.

"அம்மா! ஜின்காவுக்குப் பலகாரம் பண்ணிப் போட வேண்டும். மறந்து போகாதே. ஊருக்குப் போனதும் முதலில் உனக்கு இந்த வேலைதான்" என்று கண்ணகி உற்சாகமாகத் தான் முன்பே எடுத்துக்கொண்ட தீர்மானத்தை வெளியிட்டாள்.

"நீயும் அண்ணாக் குரங்கை மறந்துவிட்டாயா!" என்று சுந்தரம் கேட்டான்.

"கண்ணகியே செய்து கொடுத்தால்தான் நாங்கள் சாப்பிடு வோம்” என்று தன் சார்பிலும், ஜின்காவின் சார்பிலும் தங்க