பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

"போகும் வழியிலே வாங்கிக்கொள்ளலாம், கவலைப் படாதே” என்று தங்கமணி ஆறுதல் கூறிவிட்டு, டேய் சுந்தரம், உன் சாமான்களையெல்லாம் எடுத்துக்கொண்டாயா? உன் பேனாக்கத்தி எங்கே? அதை மறந்துவிட்டாயா? என்று சுந்தரத்தைப் பார்த்துக் கேட்டான்.

"அதை மறப்பேனா? நீ ஜின்காவை மறந்தாலும் நான் என் பேனாக்கத்தியை மறக்கமாட்டேன்" என்று சுந்தரம் தன் இடுப்பில் தொங்கிக்கொண்டிருந்த கத்தியைத் தொட்டுப் பார்த்துக்கொண்டு பதில் கூறினான்.

வஞ்சியூரில் தங்கியிருக்கும் நாள்களில் சமையல் செய்வதற்கு வேண்டிய உணவுப்பொருள்களையும், பாத்திரங்களையும் எடுத்து வைத்துக்கொண்டிருந்த வள்ளிநாயகி, "கண்ணகி, எல்லாரும் வாருங்கள். அப்பாவையும் கூப்பிடு. பலகாரம் சாப்பிட்டுவிட்டு விரைவில் புறப்படலாம்" என்று கூறினாள்.

உணவு முடிந்ததும் எல்லாரும் காரில் ஏறிக்கொண்டார்கள். சமையலுக்கு உதவியாக ஒரு சிறுவனும் வந்தான். பேராசிரியர் வடிவேல் காரை ஓட்டிக்கொண்டு சென்றார். சில வேளைகளில் அவருக்கு ஓய்வு தரும் பொருட்டு வள்ளிநாயகி கார் ஓட்டினாள்.

வழி நெடுகிலும் பல சிற்றூர்களையும் நாட்டுப்புறக் காட்சி களையும் கண்டு களித்துக்கொண்டே அவர்கள் அன்று மாலை பொழுது சாயும் நேரத்திற்கு வஞ்சியூர் போய்ச் சேர்ந்தனர்.

ஒரு சத்திரத்தில் வடிவேல் தங்குவதற்கு வசதியாக இடம் ஏற்பாடு செய்துகொண்டார். சமையல் செய்வதற்கும், சிறுவர்கள் தனியாக இருந்து இளைப்பாறுவதற்கும் அதில் சிறு அறைகள் இருந்தன.

வெளியிலே எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். அங்காளம்மன் திருவிழாவைப் பார்க்க வந்த மக்கள் வீதிகளிலும் திருவிழாக் கடைகளிலும் கோயில் பக்கத்திலும் திரண்டிருந்தார்கள். அன்றிரவு கோயிலுக்கு முன்னால் ஒயிலாட்டம் என்னும் நடனம் நடக்குமென்று தெரிந்தது. அதைப் போய்ப் பார்ப்பதென்று வடிவேலும் மற்றவர்களும் திட்டமிட்டார்கள்.