பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
95

"தச்சுப்பட்டறைப் பக்கம் போகாமல் அதைக் கடப்பதுதான் நல்லது. குள்ளன் அங்கே போயிருந்தால் நம்மைப் பிடிக்க முயற்சி செய்யாமலிருக்கமாட்டான். அவனிடத்திலே ஆள்கள் நிறைய இருப்பார்கள். அதனால் நாம் எச்சரிக்கையாகப் போக வேண்டும். இங்கே காலதாமதம் செய்வது நல்லதல்ல. இப்பொழுதே மணி சுமார் நான்கு இருக்கலாம்" என்று சொல்லிக்கொண்டே வடிவேல் எழுந்தார்.

"அப்பா, அம்மாவிடம் போகலாமா?” என்று கேட்டுக் கொண்டே கண்ணகி அவர் பக்கத்தில் சென்றாள். குள்ளனையும் பிடித்துக்கொண்டு போனால் அத்தைக்கு மகிழ்ச்சியாக இருக்கும்” என்று சொல்லிக்கொண்டே சுந்தரம் எழுந்தான். தங்கமணி மட்டும் ஒன்றும் பேசாமல் புறப்படத் தயாரானான். அவன் உள்ளத்திலே பலவகையான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. முந்தைய நாளிலும், இன்றும் நடந்த நிகழ்ச்சிகள் அவனுக்கு ஒரு புதுவிதமான கிளர்ச்சியையும், பெரியதொரு துணிகரச் செயலில் ஈடுபட்ட உற்சாகத்தையும் தந்தன. அவற்றைப்பற்றி எண்ணிக்கொண்டே அவன் நடக்கலானான். ஜின்கா அவன் தோளின்மேல் எறாமல் அருகிலேயே நடந்து வந்தது.

“எவ்வளவு வேகமாக எரியை அடைய முடியுமோ அவ்வளவுக்கும் நல்லது. தில்லைநாயகம், குறுக்கு வழியாகக் கூட்டிக்கொண்டு போ" என்று கூறிக்கொண்டே வேகமாக நடந்தார் வடிவேல். தில்லைநாயகம் எல்லாருக்கும் முன்னால் நடந்தான். கண்ணகியைக் கையில் பிடித்துக்கொண்டு மருதாசலம் பின்னால் நடந்தான். மலைச்சாரலிலே ஒற்றையடிப் பாதைகூட சில இடங்களில் சரியாக இருக்கவில்லை. சிற்சில இடங்களில் உயரமான பாறைகளிலிருந்து ஐந்தடி, ஆறடி ஆழத்திற்குக் கீழே குதித்துச்செல்ல வேண்டியிருந்தது. அப்படிப்பட்ட இடங்களிலெல்லாம் மருதாசலம் கண்ணகியைத் தூக்கிக் கீழே விட்டான். தங்கமணியும் சுந்தரமும் விளையாட்டாகக் குதித்துக் குதித்துச் சென்றார்கள். யாராவது அந்தப் பக்கத்திலே தென்படுகிறார்களா என்று உற்றுப் பார்த்துக் கொண்டே பேராசிரியர் வடிவேல் எச்சரிக்கையாக நடந்தார். அவரிடத்திலே எந்த வகையான ஆயுதமும் இல்லை. அதனால்