பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61

“அந்தக் குள்ளன் தான் அவரை ஏமாற்றி இங்கே கொண்டு வந்து வைத்திருக்கிறான். அவனுடைய திருட்டுத் தொழிலைத் தெரிந்துகொள்ளாமல் இவர் அவனுக்கு உதவி செய்து வருகிறார்” என்று அவன் கூறிக்கொண்டிருக்கும் போது அவனுடைய தந்தை தில்லைநாயகம் ஒரு பெரிய மூட்டையைத் தலையில் சுமந்துகொண்டு அங்கே வந்து சேர்ந்தார்.

வந்ததும் அவர், “மருதாசலம், பட்டணத்திலிருந்து வந்தாச்சா! எப்படி இவ்வளவு சீக்கிரம் வந்தாய்?” என்று மூட்டையைக் கீழே இறக்கி வைத்துக்கொண்டே ஆச்சரியத்தோடு கேட்டார்.

“பட்டணத்துக்கா அந்தக் குள்ளன் கூட்டிக்கொண்டு போனான்? அந்தக் குள்ளன் என்னைக் கொல்லத்தான் கூட்டிக் கொண்டு போனான்” என்று ஆத்திரத்தோடு பேசினான் மருதாசலம்,

தில்லைநாயகத்திற்குத் தம் மகன் கூறுவது ஒன்றும் விளங்கவில்லை. “இவர்கள் எல்லாம் யார்? எப்படி இங்கே வந்தார்கள்?” என்று மேலும் வியப்போடு கேட்டார்.

“அப்பா, முதலில் குகைக்குப் போவோம், வாருங்கள், நாங்கள் எல்லாரும் பட்டினியாகக் கிடக்கிறோம். உடனே சாப்பாடு வேண்டும். சாப்பாடு தயாரித்துக்கொண்டே பேசுவோம்.”

எல்லாரும் குகையை நோக்கித் திரும்பிச் சென்றார்கள். தில்லைநாயகம் தம் மடிப்பையில் வைத்திருந்த சாவியை எடுத்துப் பூட்டைத் திறந்தார். “நீங்கள் எங்கேயப்பா போயிருந்தீர்கள்? நான் சீழ்க்கையடித்தது காதில் விழவில்லையா?” என்று மருதாசலம் கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான்.

“அரிசி தீர்ந்துபோச்சு. வாங்கிவரக் கூடல் பட்டணம் போயிருந்தேன்” என்று தில்லை நாயகம் பதிலளித்தார்.

தந்தையும் மகனும் பேசிக்கொண்டே சமையல் வேலையில் ஈடுபட்டார்கள். அவர்களுடைய எஜமானன் ஒரு திருடன் என்பதையும், அவன்தான் கொல்லிமலைக் குள்ளன் என்பதையும் அவனுடைய ரகசியக் குகையையும் தான் தற்செயலாகக் கண்டு கொண்டதால் தன்னைக் கொல்ல அவன் சூழ்ச்சி செய்து