பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

“என்னைத்தான் உங்கள் மகன் முதலில் காப்பாற்றினான், அந்தக் குள்ளன் என்னையும் கொல்லுவதற்கு முயற்சி செய்தான். ஆனால், நல்லவேளையாக தங்கமணி அங்கு வந்து சேர்ந்தான். என் பெயர் மருதாசலம்” என்றான் மருதாசலம்.

“குள்ளனுக்கு ஊழியம் செய்பவர் மருதாசலத்தின் தந்தை. அவர் பெயர் தில்லை நாயகம். மேலே இருக்கிறார்”

“எந்தக் குள்ளன்? நீங்கள் இரண்டு பேரும் யாரைச் சொல்லுகிறீர்கள்?” என்று வடிவேலு ஒன்றும் விளங்காமல் கேட்டார்.

“அவன்தான் அப்பா. உங்களைச் சூழ்ச்சி செய்து கட்டி வந்தவன். அவனே தான் கொல்லிமலைக் குள்ளன்!” என்று கண்களில் வெற்றி ஒளி வீசத் தங்கமணி கூறினான்

“அவனையா பிடித்துவிட்டீர்கள்?” என்று வடிவேலு ஆச்சரியப்பட்டுக்கொண்டே மேலே ஏறலானார். அவரைப் பின்தொடர்ந்து மருதாசலம் வந்தான்.

வடிவேலுவின் தலை, மேலே தெரிந்ததும், ‘அப்பா’ என்று கூவிக்கொண்டு கண்ணகி ஓடி வந்தாள். ‘மாமா’ என்று உற்சாகமாகச் சுந்தரம் கூவினான். எல்லோருடைய மகிழ்ச்சியையும் கண்டு ஜின்கா உற்சாகத்தோடு குரல் கொடுத்துக்கொண்டு குதித்தது.

“இந்தக் குரங்குதான் எங்களை யெல்லாம் காப்பாற்றியது” என்று கூறிக்கொண்டே தில்லைநாயகம் வந்து, வடிவேலுவுக்கு வணக்கம் செய்தார்.

“ஆமாம், அம்மா எங்கே?” என்று திடீரென்று தோன்றிய கலக்கத்தோடு வடிவேலு கேட்டார்.

“அம்மா போலீஸ் இன்ஸ்பெக்டரை அழைத்துக்கொண்டு கூடல் பட்டணம் போயிருக்கிறார்கள். முதலில் நாம் இந்தக் குள்ளனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு போக வேண்டும்” என்று அவசரப்பட்டான் தங்கமணி.