பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைச் சித்திரம்

59

வைத்துள்ள கிண்ணங்களையும் ஒரு தூரிகையையும் அதனிடம் கொடுத்து விடவேண்டும். சாதாரணமான பூச்சு வர்ணங்களைநீரில் கரைத்துக் கொடுத்தால் அதுவே போதும். பெரிய அளவில் ஒரு காகிதத்தையும் கொடுத்து விட்டு நாம் விலகி விடவேண்டும். குழந்தை தன் உள்ளக் கிளர்ச்சிகளைச் சித்திரித்துக் காண்பிக்கப் போகிறது. அதிலே நாம் குறுக்கிடக் கூடாது.

முறைப்படி பயின்ற ஒவியர்களின் சித்திரங்களோடு குழந்தையின் சித்திரத்தை ஒப்பிட்டுப் பார்ப்பதும் தவறு. இரண்டும் வெவ்வேறான இலக்கண விதிகளை அடிப்படையாகக் கொண்டு எழுந்தவை. குழந்தைச் சித்திரத்திற்கு நாம் வியாக்கியானம் செய்ய முயல்வதைவிடக் குழந்தையிடமிருந்தே அதைக் கேட்டுப் புரிந்து கொள்ளுவது நல்லது.

இதோ இந்தப் படத்திலே பாருங்கள். பறவையும் பாம்பும் பேசிக் கொண்டிருக்கின்றன. குழந்தைகளுடைய கற்பனையின்படி பறவைகளும் மற்ற உயிர்ப்பிராணிகளும் பேசும். பாம்புக்குக் கால்கள் ஏது என்று நீங்கள் கேட்பீர்கள். குழந்தையின் கற்பனையிலே அதற்கு நூற்றுக்கணக்கான கால்கள் உண்டு. காலில்லாமல் எப்படி அது நடக்க முடியும் என்பது குழந்தையின் கேள்வி!

சுருக்கமாகக் கூறினால் சித்திரம் என்பது குழந்தைகளுக்குத் தம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த