பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 45


“மாகாளி பராசக்தி உருசிய நாட்
      டினிற் கடைக்கண் வைத்தாள், அங்கே
ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி”

(பாரதியார் கவிதைகள் பக். 90)

என்று பாடுகிறான்.


நம்முடைய நாட்டில், கலியுகம் எப்போது போகும்: கிருதயுகம் எப்போது வரும்? இனிய அன்புடையீர்! எதுவும் தானாக நடக்காது. கலியுகத்தைக் கொன்று கிருதயுகத்தைக் காண எழுமின்! எழுமின்!

சமுதாய வாழ்க்கையில் வளர்ச்சி இருக்கவேண்டும். வளர்ச்சிக்கு வாயில் மாற்றங்கள். எங்கு மாற்றமில்லையோ அங்கு வளர்ச்சியில்லை. அதுபோலவே எங்கு வளர்ச்சியில்லையோ அங்கு மாற்றமில்லை.

நம்முடைய சமுதாயம் நீண்ட நெடு நாட்களாகவே மூடத்தனத்தில் முடங்கிக் கிடக்கிறது. எந்தவொரு மூடத்தனத்தினின்றும் நாம் விடுதலை பெற்றோமில்லை. விடுதலை பெற முடியாத நிலையில் பொய்மைச் சாத்திரங்களும் மதங்களும் தடை செய்கின்றன. காதலிருந்து கடவுள் சந்நிதி வரை சாதிகள் ஆட்சி செய்கின்றன. நாளும் தன்னம்பிக்கையைக் கொல்லும் மூட நம்பிக்கைகள் ஏராளம்! ஏராளம்! எனவேதான் பாவேந்தன் பாரதிதாசன்,

“மூடத்தனத்தை முடுக்கும் மதத்தை நிர்
மூலப்படுத்தக் கை ஓங்குவீர்!”
                                       (பாரதிதாசன் பா. 50 பக். 160.)

என்று முழங்குகிறான்.