பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹாரோ பள்ளியில் இடம் பிடித்துக்
கல்வியைத் தொடர்ந்து கற்றனரே.
பேரார் வத்துடன் படித்தனரே.
பெற்றவர் நாடு திரும்பினரே.

வெள்ளை மாணவர் பலருக்கும்
விளையாட் டில்தான் கவனமெலாம்.
நல்லவை எல்லாம் அறிவதிலே
நாட்டம் கொண்டார் நம்ஜவஹர்.

செய்தித் தாள்கள் படித்திடுவார்;
தினமும் உலக நிலை அறிவார்:
ஐயம் ஏதும் அவர்க்கிருந்தால்
அடுத்த வரிடத்தில் கேட்டறிவார்.

அந்நியர் ஆட்சியை அகற்றிடவும்
அடக்கு முறைகளை எதிர்த்திடவும்,
இந்திய மக்கள் திரண்டெழுந்தார்
என்பதை அறிந்து மனமகிழ்ந்தார்.

பள்ளியில் ஒழுங்காய்ப் படித்ததனால்
பரிசாய்க் கிடைத்ததோர் புத்தகமே
உள்ளே திறந்து படித்ததுமே
ஊக்கமும் உணர்ச்சியும் பெற்றனரே.

38