பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

உவமைக்கவிஞர் சுரதா



சொல்லாக்க நெடு வழியில்....
பேராசிரியர், முனைவர் இராம. குருநாதன் அவர்கள்

புதுப்புது தேடல்களை ஆர்வத்தோடு எல்லாத் துறைகளிலும் ஈடுபாட்டோடு அணுகும்போது பழைய சுவடுகளையும் நினைத்துப் பார்ப்பது ஒருவகையில் ஆர்வத்தைக் கிளறச் செய்யும். இந்த மலரும் நினைவுகள் எல்லாவற்றுக்கும் பொருந்தும். பழைய திரைப்படப் பாடல்களில் மனம் பதித்து அதிலேயே பற்றுக்கொண்டிருப்பவர்களை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். இப்படிப்பட்ட உணர்வை, உவமைக் கவிஞர் சுரதா, பழைய நூல்களிலிருந்து திரட்டி வைத்திருந்த அரிய சொல்லாக்கங்களைச் சுவைபடத் தொகுத்ததன் மூலம் தந்திருக்கிறார்.

தமிழின் சொற்பொருள் வரலாற்றைக், குறிப்பாக, கடந்த இரு நூற்றாண்டுகளில் வெளிவந்த நூல்கள் வழி அறிவதற்கு ஒரு வழித்துணையாக உள்ளது இந்நூல். இந்நூலிலிருந்து பல்வேறு அரிய சொற்களின் பொருள்களை உணர்ந்து கொள்கிறோம். அரிதின் முயன்று தொகுத்த நூல்கள் கவிஞரிடம் மிகுதியும் உள்ளன. அவற்றிலிருந்து அருமையான தகவல்களை அவ்வப்போது நண்பர்களிடம் சொல்லியும், இதழ்களில், நூல்களில் எழுதியும் வருவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர் அவர். இது போன்றவற்றிற்கு அவரே ஒரு தகவல் களஞ்சியம்.

வடமொழிச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச் சொற்களைத் தந்தமை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குச் சொற்களைப் பெயர்த்தல் முதலிய நிலைகளில் பழந்தமிழ் அறிஞர்கள் எத்தகைய இயல்புகளை மேற்கொண்டனர் என்பதற்கு இந்நூல் ஓர் தகவல் ஆவணமாக விளங்குகிறது.

பழந்தமிழ் நூல்களில் காணக் கிடைக்கும் அரிய சொற்களை அவற்றின் திறனறிந்து தொகுத்துத் தந்தமைக்காகக் கவிஞரைப் பாராட்டவேண்டும். இதனைத் தந்துள்ள முறைமையும் அருமையாய்