பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

99


தனியென்பது சுத்த சித்து நானென்ற திடத் தீர்மானம். நானே நீ, நீயே நான் ஆகையால் ஞானகுரு தன்னறிவைத் தவிர வேறின்மையால் சுத்த சாதகர்கள் ஊன் பிறந்த வுடலைச் சுமப்பது பாரமென்று எண்ணி, ஏன் பிறந்தோம் என்ற ஏக்கமே தங்கள் வாழ்நாள் முழுதும் குடிகொண்டு, பண்டைக் காலத்திற் செய்த புண்ணியத்தின் பலனாக, புதிய நிலையாகிய தான் பிறந்த விடமான வான் பிறந்த வனத்திற் சஞ்சரித்துக் கொண்டு உள்ளக் கோயிலை ஒன்றிப் பார்த்து தம்மிதயத்துட் காணவேண்டிய பொங்கு பேரொளியே தனிநிலை இயல்பாம்.

நூல் : அருள்சிவம் (1926)
1. தனிநிலை இயல்பு, பக்கங்கள் - 1, 2
நூலாசிரியர் : திரு. சாம்பசிவம்
Light House - கலங்கரை விளக்கம்

அந்த நகருக்கு அருகில் அழகிய அரணியம் ஒன்றுண்டு. அங்கு மா பலா முதலிய பழமரங்கள் தளிர்த்துத் தழைத்துப் பூத்துக் காய்த்துக் கனிந்து, சூரிய கிரணங்கள் பூமியிற் பரவாவண்ணம் செறிந்து விளங்கின. அந்தச் சூழலில், பாவமாகிய கடலைக் கடந்து, முத்தியாகிய கரையிற் சேர விரும்புவோர், தவமாகிய கலத்தைத் திகைப்பின்றி நடத்துவதற்கு ஓங்கிநின்ற கலங்கரை விளக்கமே போல, நெடுங்குன்றம் ஒன்று நிலைத்து விளங்கிற்று. அதன் சாரலில், யான் எனது என்னும் அகப்பற்றுப் புறப்பற்றுக்களை அறவே ஒழித்த அருந்தவத்து அந்தணர் சிலர் ஆங்காங்கே பர்ண சாலைகள் அமைத்துக் கொண்டு தம் மனைவி மக்களோடு வதிந்திருந்தனர்.

நூல் : குசேலன் (1926) பக்கம் - 8
நூலாசிரியர் : கா. நமச்சிவாய முதலியார்
(மேரி யரசி கலாசாலைத் தலைமைப் பண்டிதர்)
General Hosptial – பொது மருத்துவச் சாலை

11ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை அவர்தம் திருமேனியை, விழாக்கோலத்துடன், அரசாங்கப் பொலிஸ்ப்படை புடைசூழ்ந்து மரியாதை புரிந்து வரவும், அரசாங்க அதிகாரிகள் எத்திறத்தினரும் ஏனையோரும் பின் றொடர்ந்து செல்லவும், சென்னை நகரின் வட கோடியாகிய இராயபுரத்திலிருந்து, சென்னை நகரின் தென் கோடிப் பகுதியொன்றின் கண்ணுள்ள (அரசாங்கப் பொது மருத்துவச் சாலைக்கருகில் (General Hospital) அர்ச். வியாகுல மாதா கல்லறைத் தோட்டத்துக்கு எடுத்துச் சென்றனர்.