பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழ. வள்ளியப்பா

❖ 51



"ஐயா! கொஞ்சம் கதவைத் திறவுங்கள், டெலிபோன் செய்ய வேண்டும். அவசரம்” என்று துடித்துடித்துக் கொண்டே கூறினான்.

“உனக்கு அவசரமாக இருந்தால் எனக்கென்னடா? போ, போ. ஊரிலே இருக்கிறவனுக்கெல்லாம் இந்த டெலிபோன்தான் அகப்பட்டதாக்கும்? பேசாமல் மூணாவது தெருவுக்குப் போய் அங்கே இருக்கிற பொது டெலிபோனில் பேசு” என்று உபதேசம் செய்தார் கார்த்திகேயர்.

“ஐயோ, அடுத்த தெருவிலே ஒரு வீட்டில் தீப் பிடித்துக் கொண்டது. உடனே தீயணைக்கும் படைக்குப் போன் பண்ண வேண்டும். என்னை அனுமதிக்காது போனாலும், நீங்களாவது சீக்கிரம் தகவல் கொடுத்தால் உபகாரமாயிருக்கும். ஐயா, உங்களுக்குக் கோடி புண்ணியம்” என்று கெஞ்சினான் சிறுவன்.

“டேய், வீணாக என்னை இந்த நேரத்தில் தொந்தரவு செய்யாதே. நீ சொன்னபடி செய்வதற்கு நான் என்ன, நீ வைத்த ஆளா? அடுத்த தெருவிலே நெருப்புப் பிடித்தால் எனக்கென்ன? போ, போ. இங்கே நிற்காதே” என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார் கார்த்திகேயர்.