பக்கம்:சொன்னார்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94


எழுத்தாளர்கள் தங்கள் பேனவை எப்பேர்பட்ட மையில் தொட்டு எழுதுகிறார்கள் என்பதைக் கேட்டால் நீங்கள் ரொம்பவும் ஆச்சரியப்படுவீர்கள். அதாவது, பொறா'மை'யில் தொட்டு எழுதுகிறார்கள். இன்னும் சிலர் தற்பெரு'மை'யில் தொட்டு எழுதுகிறார்கள். இன்னும் சிலரோ பொய்'மை', பழ‘மை’, கய'மை', அறியா'மை' போன்ற ‘மை'களில் தொட்டு எழுதுகிறாகள். நல்லதகுதியுள்ள எழுத்தாளன், தன் பேனாவை புது‘மை’, 'உண்மை’, பொறு'மை', வறு'மை', உரி'மை'; கட'மை' இத்தகைய மை'களில்தான் தொட்டு எழுதிக் கொண்டிருக்கிறான்.

— கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்


தென்னை, பனை, வேர்க்கடலை, வாழை ஆகியவற்றுடன் பல விதமான கிழங்குகளையும் இயற்கை ஏராளமாக வழங்கியிருக்கும் சென்னையைப் போன்ற ஒரு மாகாணத்தில், உணவுக்கான இயற்கை வளங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை மட்டும் மக்கள் அறிந்தால் அவர்கள் பட்டினி கிடக்க வேண்டியதில்லை என்றே நான் கூறுவேன்.

—காந்தியடிகள் (30-1-1948)


நான் நீண்ட காலம் எந்தவகை மருந்தும் சாப்பிட்டதில்லை. மருந்து சாப்பிட வேண்டாம் என்று மற்றவர்களுக்கு புத்திமதி சொல்லியிருக்கிறேன். அதிர்ஷ்டவசமாக எனக்கு நோய் ஏற்பட்டதில்லை.

—நேரு (14-10-1962)


கடந்த காலத்தில் பஞ்சம் ஏற்பட்ட போதெல்லாம் ஆயிரக் கணக்கில் ஏழைகள் செத்துப் போவார்கள். அதற்கு தலைவிதியை நொந்து கொள்வார்கள். ஆனால், இப்போது காலம் மாறிப்போய் விட்டது. இன்று பட்டினிச்சாவு ஏற்பட்டால், பெரிய புரட்சியே தோன்றிச் சமுதாயச் சீர்குலைவு ஏற்படும்.

—சி சுப்பிரமணியம் (28-11-1966)

(மத்திய உணவு அமைச்சர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/96&oldid=1015983" இலிருந்து மீள்விக்கப்பட்டது