பக்கம்:சொன்னார்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75


பாரதத்தைப் போன்ற பசியால் பீடிக்கப்பட்ட நாட்டில் யோசனையின்றி, வசதியாகப் பராமரிக்கும் சக்திக்கு அப்பாற்பட்ட எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்று, அவர்களை முடிவில்லாத கஷ்டத்திற்குள்ளாக்கி, குடும்பத்தையும் கீழ் நிலைக்குக் கொண்டு வருதல் கொடுமையானதொரு குற்றமாகும்

—ரவீந்திரநாத் தாகூர்


குற்றம் செய்தவன், அதற்குள்ள தண்டனையடைதல் வேண்டும், கருணை காட்டுவது எளியோரிடமன்றிக் குற்றவாளியிடமன்று. குற்றஞ் செய்தவர்களை மன்னித்துக் கொண்டேயிருந்தால் உலகம் ஒழுங்காக நடைபெறாது. எமன் எப்போதும் தண்டித்துக் கொண்டேயிருப்பினும் தருமன் என்று அழைக்கப்படுகிறான். காரணமென்னை? நடு நிலைமையோடு சிக்‌ஷித்தலால் அன்றோ ஆகவே, இறந்தவர்கள் பெயரால், மூட நம்பிக்கையால் பார்ப்பனருக்கோ, சைவருக்கோ பணங்களைக் கொடுக்க வேண்டாம். இவ்வாறு கூறுவதால் என்னை நாத்திகன் என்று சிலர் கூறலாம். பிறரால் ஏமாற்றப் படுவதைத் தடுக்கும் பொருட்டே நான் சொல்லுகிறேன்.

—வ. உ. சி. (3-3-1928)


கள் குடித்தவனுக்குத் தாய் என்றும் மனைவி என்றுமுள்ள வேற்றுமை தோன்றாது. ஆதலால் அறிவைக் கெடுக்கும் கள்ளை அறவே விட்டு விடுங்கள். நாம் உட்கொள்ளும் ஆகாரங்கள் மூவகைப்படும். அவற்றுள் தாமச போஜனத்துடன் சேர்க்கப்பட்டுச் சோம்பல், அறியாமை முதலிய தீய ஒழுக்கத்தை உண்டு பண்ணும் மதுபானத்தை விலக்குங்கள்.

- சுவாமி சகஜானந்தா (8-4-1928)

(கழனிவாசல் ஆதி திராவிட பாடசாலையின் முதலாண்டு விழாக் கூட்டத்தில்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/77&oldid=1014706" இலிருந்து மீள்விக்கப்பட்டது