பக்கம்:சொன்னார்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50


நான் ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்தேன். 33 மாதங்கள் மராட்டியத்திலுள்ள அமராவதி சிறையில் காமராசருடன் நான் இருந்தேன். நமது நாடு சுதந்திரம் பெற்று மக்கள் சுக வாழ்வு வாழ வேண்டும் என்றுதான் நாங்கள் தியாகம் செய்தோம். சிறையில் வாடினோம். நான் சிறையிலிருந்த போது, நான் மந்திரியாவேன், சட்டசபை உறுப்பினராக வருவேன் என்று நினைத்தது கூட இல்லை.

—ராஜாராம் நாயுடு (3-1-1977)

(குடிசை மாற்று வாரியத் தலைவர்)


ஏராளமான குழந்தைகளைப் பெறுவதைவிட சில குழந்தைகளோடு கட்டுப்படுத்தி, அவர்களுக்குப் போதுமான உணவு, துணிமணி, மற்ற வசதிகளைச் செய்து தருவதே நல்லது.

—நடிகை செளகார் ஜானகி (18-12-1960)


நான் திருச்சியில் கல்லூரியிலே படிக்குங்காலத்தில் நாடகங்களில் நடித்தேன். அந்தக் காலத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதரின் பாட்டுகளை நான் அருமையாகப் பாடுவேன்

—நடிகர் அசோகன் (7-3-1961)


தமிழ் இசையைப் பற்றிய சிறப்புகளைப் பொதுவாக நம் தமிழ்ப் படங்களில் காணுவதற்கே இடமில்லை. தமிழ் இசைக் கலையை வளர்க்காது போவோமேயானால் தமிழ் இசைக்கே பெரும் தீது செய்தவர்களாவோம். தமிழ்ப் படங்களிலே இந்திப் பாட்டுக்களையோ, சமஸ்கிருத பாட்டுக்களையோ புகுத்த வேண்டிய அவசியமே இல்லை. வேண்டிய இடங்களில் எல்லாம் தமிழ்ப் பாட்டுக்களே அமைத்துக் கொள்வதுதான் பொருத்தமாகும்.

குமாரராஜா எம் ஏ. முத்தையா செட்டியார் (25.5-1941)

(சென்னை பிரபாத் தியேட்டரில் நடைபெற்ற சகுந்தலை என்ற படத்தின் 100-வது நாள் விழாவில்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/52&oldid=1013983" இலிருந்து மீள்விக்கப்பட்டது