பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

பாண்டியன் நெடுஞ்செழியன்

இருக்கின்றன. அவற்றைச் சுற்றிச் சூழ ஒரு நெடிய மதிலை எழுப்பியிருக்கிறார்கள். மதில் வாசல் எவ்வளவு பெரிதாக இருக்கிறது! பெரிய நிலை; இரட்டைக் கதவுகள்; இரும்புப் பட்டமும் ஆணிகளும் கொண்டு கதவைச் சமைத்திருக்கிறார்கள். நிலைக்கு மேலே வளைந்த வளைவு இருக்கிறது; அதைக் கற்கவி என்று சொல்வார்கள். அதில் நடுவே திருமகள் வீற்றிருக்க, இரு மருங்கும் இரண்டு யானைகள் தம் கைகளில் செங்கழு நீர்ப் பூவை ஏந்திக்கொண்டு நிற்கின்றன. இந்த வளைவின் கீழே உறுதியான நிலை இருக்கிறது. அந்த நிலையில் தெய்வம் இருப்பதாக எண்ணி நெய்யும், அரைத்த வெள்ளைக் கடுகும் அப்பியிருக்கிறார்கள். தெய்வத்துக்கு அவ்வாறு அப்பி வழிபடுவது அந்தக் காலத்து வழக்கம்.

இந்த உயர்ந்த வாசல் வழியே யானைகள் போகும். வெறும் யானைகள் மட்டும் அல்ல. தம் மேலே கொடியை உயர்த்திய யானைகள் அந்தக் கொடியைத் தாழ்த்தவேண்டிய அவசியம் இல்லாமலே புகும்படி உயரமாக அமைத்திருக்கிறார்கள், இந்த வாசலை. வாசலுக்கு மேலே கோபுரம். அது குன்று போலே விளங்க, குன்றைக் குடைந்தது போலத் தோன்றுகிறது வாசல்.

வாசலைக் கடந்து உள்ளே சென்றால் பரந்த வெளி இருக்கிறது. அந்த முற்றத்தில் கவரிமான்களும் அன்னப் பறவைகளும் ஓடியாடித் திரிகின்றன. இந்த அரண்மனையில் திருமகள் விலாசம் எப்போதும் குறையாமல் இருந்துகொண்டிருக்கிறது.

ஒரு பக்கம் குதிரை கட்டும் இடம் இருக்கிறது. அங்கே குதிரைகள் தங்க மனமில்லாமல் வாய் வழியே