பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8. மதுரைக் காஞ்சி

துரையில் உள்ள அரசனுக்கு நிலையாமையைப் புலப்படுத்திய காஞ்சித் திணைப் பாட்டாதலின் அதற்கு மதுரைக் காஞ்சி என்ற பெயர் அமைந்தது. அது மதுரையையும் வருணித்துக் காஞ்சித் திணைப் பொருளாகிய நிலையாமையையும் அறிவுறுத்துகிறது.

நெடுஞ்செழியனுடைய முன்னோர்கள் தம்முடைய நாட்டை நல்ல முறையில் ஆண்டு வந்தார்கள். அதனால் காற்று நன்றாக வீசியது. நட்சத்திரங்கள் காலத்துக்கு ஏற்ற கதியிலே நடந்தன. கதிரவனும் திங்களும் தங்களால் ஒரு குறையும் நேராமல் ஒளி வழங்கினர். மேகம் உரிய காலத்தில் பெய்தது. திசைகளெல்லாம் தழைத்தன. ஒன்று ஆயிரமாக விளைநிலங்கள் விளைந்து மல்கின. மரங்கள் நன்றாகப் பயன் தந்தன. பசியும் பிணியும் இல்லாமல் மக்கள் அழகுடன் விளங்கினர். எவ்வளவு பேர் எத்தனை காலம் உண்டாலும் குறையாத வளம் நாட்டில் நிரம்பியது. எக்காலத்திலும் மெய்யையே கூறும் அமைச்சர்கள் அரசர்களுக்குத் துணையாக இருந்தனர். இப்படி இங்கே வெள்ளமெனும் பெரிய எண்ணிக்கை அமைந்த ஆண்டுகளாகக் கிருதயுக வாழ்வே நிலைபெற்றிருந்தது.

“அப்படி உலகத்தை ஆண்ட மன்னர்களின் வழி வந்தவனே!” என்று முதற் பகுதியில் மருதனார் அரசனை விளிக்கிறார்.