பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

பாண்டியன் நெடுஞ்செழியன்

நாளங்காடியையும் அல்லங்காடியையும் பார்த்து விட்டோம். இனி இம் மாநகர் மக்கள் எவ்வாறு இரவிலே பொழுது போக்குகிறார்கள் என்பதைக் கவனிப்போம்.

கதிரவன் மறைந்தான். நிலாப் புறப்படுகிறது. தம்முடைய கணவன்மார் பிரிவின்றித் தம்முடன் இருக்கப் பெற்ற மகளிர் மாலையும் அணியும் அணிந்து வாசப்புகை ஊட்டிய ஆடை புனைகிறார்கள்; விளக்கு ஏற்றுகிறார்கள். கணவரைப் பிரிந்தோர் வருந்துகிறார்கள். செல்வர்களே நாடிப் பரத்தையர் தம்மை அலங்கரித்துக்கொண்டு செல்கிறார்கள். திருமாலுக்குரிய ஓண விழாவில் நடந்த குத்துச் சண்டை முதலியவற்றில் பெற்ற நெற்றி வடுவையும் கண்ணியையும் உடைய வீரர்கள் தெளிந்த மதுவை உண்டு திரிகிறார்கள். கணவர் உவக்கும்படியாகக் குழந்தையைப் பெற்ற மகளிர் புனிறு தீர்ந்து குளத்தில் நீராட அதுகண்டு முதற் சூலைக் கொண்ட மகளிர் பூசைக்கு வேண்டிய பொருள்களைக் கொண்டு சென்று கோயிலிலுள்ள தேவராட்டியிடம் கொடுத்து வழிபடுகிறார்கள். பூசாரி முருகனுக்குப் பூசை போடும்போது பலவகை வாத்தியங்கள் முழங்குகின்றன. அங்கே மகளிர் கை கோத்துக்கொண்டு குரவைக் கூத்து ஆடுகிறார்கள்.

தெருக்களில் கதை பேசுவார் பலர்; பாட்டுப் பாடுவார் பலர்; கூத்தாடுவார் பலர். இப்படிப் பலபல வகையான கம்பலைகள் மலிந்துள்ளன. இந்த வகையில் முதற் சாமம் கழிகிறது.

இரண்டாம் சாமம் வந்துவிட்டது. சங்குகளின் ஓசை அடங்குகிறது. வியாபாரம் செய்கிறவர்கள்