பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

பாண்டியன் நெடுஞ்செழியன்

நெடுநல் யானையும் தேரும் மாவும்
படையமை மறவரும் உடையம் யாம்’ என்று
உறுதுப்பு அஞ்சாது உடல்சினம் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமம் சிதையத் தாக்கி முரசமொடு
ஒருங்ககப் படேஎன் ஆயின், பொருந்திய
என் நிழல் வாழ்நர் செல் நிழற் காணாது
‘கொடியன்எம் இறை’ எனக் கண்ணீர் பரப்பிக்
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக!
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக
உலகமொடு நிலையஇய பலர்புகழ் சிறப்பிற்
புலவர் பாடாது வரைகஎன் நிலவரை! புரப்போர் புன்கண் கூர,
இரப்போர்க்கு ஈயா இன்மையான் உறவே!


  • இவன் ஆளும் நாட்டை உயர்வாகக் சொல்பவர்கள் எள்ளி நகையாடற்குரியவர்கள்; இவன் இளைய சிறு பையன்’ என்று நான் வருந்தும்படி சொல்லி, ‘ஒலிக்கின்ற மணி மாறி மாறி இசைக்கும் பரந்த அடியைபும் பருத்த காலையும் உடைய யானையையும், தேரையும், குதிரையையும், படைக்கலங்களைப் பெற்ற வீரர்களையும் உடையோம் யாம்’ என்று என்னுடைய மிக்க வலிமைக்கு அஞ்சாமல் பெரும் சினம் மிக்குச் சிறுமைப் பண்பைக் காட்டும் சொற்களைச் சொல்லிய சினமுடைய மன்னரை, வெல்லற்கரிய போரிலே சிதையும்படி தாக்கி அவர்களுடைய முரசத்தோடு ஒருங்கே அகப்படுத்தாமல் இருந்தேனானால், இதுகாறும் பொருந்தி நிற்கும் என் குடை கிழலில் வாழ்வார்களாகிய குடி மக்கள் தாங்கள் பாதுகாப்பின் பொருட்டுச் சாரும் நிழலைக் காணாமல், ‘எம் வேந்தன் கொடியவன்’ என்று கண்ணீர் விட்டுப் பழி தூற்றும் கொடுங்கோலுடையவனாகுக! உயர்ந்த பெருமையையும் மேம்பட்ட கேள்வியையுமுடைய மாங்குடி மருதன் தலைவனாக உலகத்தோடு நிலைபெற்ற பலர் புகழும் சிறப்பைப் பெற்ற புலவர் என் நில எல்லையைப் பாடாமல் நீங்குக! என்னால் காப்பாற்றுவதற்குரிய உறவினர் துன்பம் மிக, என்னிடம் வந்து இரப்பவர்களுக்குக் கொடுக்க மாட்டாத வறுமையை யான் அடைவேனாகுக!