பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

பாண்டியன் நெடுஞ்செழியன்

இத்தகைய இடங்களில் வழி நடப்போரிடம் ஏதேனும் இருந்தால் அதைப் பறிக்கும் ஆறலை கள்வர் வருவார்கள். அவர்களால் வழிச் செல்வாருக்குத் தீங்கு நேராமல் காவல் புரியும் இளம்பருவ ஆடவர்கள் அங்கங்கே இருக்கிறார்கள். இலை வேய்ந்த குடிசையில் மான்தோலைப் படுக்கையாகக் கொண்டவர்கள் அவர்கள்; தழை விரவின கண்ணியைச் சூடி இருக்கிறார்கள். கடுமையான சொல்லையுடையவர்கள் அவர்கள்.

கதிரவன் கடுமையாகக் கதிர்களை வீசுகிறான். நிழல் என்பதே இல்லாத இடம் இது; வேனில் அரசாட்சி செய்யும் பாலை நிலம்.

கடற்கரையுடைய நெய்தல் நிலத்தில் நம் கண்ணிலே படுகின்ற பண்டங்கள் எத்தனை எத்தனை! கடலிலிருந்து எடுத்த முத்து; வாளரத்தால் சங்கையறுத்துச் செய்த வளை, பரதவர் கொண்டு வந்த பல வகைத் தானியங்கள், வெள்ளை உப்பு, இனிய புளி, ஓடத்தையுடையவர்கள் அறுத்த மீன் துண்டங்கள், வேற்று நாட்டிலிருந்து மரக்கலத்தில் வந்த குதிரைகள் ஆகிய இவை நாள்தோறும் வந்து மிகுதியாக நிறைகின்றன.

இவ்வாறு பாண்டி நாட்டில் ஐந்து வகையான நிலங்களும் அழகுபெற்று விளங்குகின்றன. புலவர்களால் பாடப்பெற்ற இந்த நாட்டில் பல ஊர்களும் அவ்வூர்களில் குடிமக்களும் இருப்பதைக் காணலாம். அவ்வூர்களுக்கு நடுவே சிறந்து இலங்குவது மதுரை.

இனி அம் மதுரை மாநகரையும் அங்கு வாழ்வோரையும் சென்று காண்போம்.