பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

பாண்டியன் நெடுஞ்செழியன்

மூதூர் வாயிற் பனிக்கயம் மண்ணி
மன்ற வேம்பின் ஒண்குழை மலைந்து
தெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி
வெம்போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த
வம்ப மள்ளரோ பலரே;
எஞ்சுவர் கொல்லோ? பகல் தவச் சிறிதே![1]

“போரைப்பற்றி எவ்வளவோ செய்திகளை அறிந்திருக்கிறோம். பல போர்களைப்பற்றிக் கேட்டிருக்கிறோம். ஆனால் இதற்கு முன் இத்தகையதொரு போரைப்பற்றிக் கேட்டதே இல்லை” என்றார் இடைக் குன்றூர் கிழார்.

அயலில் நின்ற புலவர், “எதை எண்ணிச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“ஓர் அரசனை மற்றோர் அரசன் தாக்குவது உண்டு. ஒருவனை ஒருவன் எதிர்த்து அழிதலும் உண்டு. அது புதுமையன்று; உலகத்தில் எங்கும் நடக்கும் இயற்கை. ஆனால் இதற்கு முன் இந்த மாதிரி நடந்ததைக் கேட்டதே இல்லை.”

“இதுவும் சண்டைதானே?”

“இதில் ஏழு பேரோடு இளம் பருவமுடைய ஒரு மன்னன் தனியே நின்று போரிடுவதென்பது வியப்


  1. தன் பழைய நகரத்கின் வாயிலில் உள்ள குளிர்ச்சியையுடைய குளத்தில் நீராடிப் பொதுவிடத்தில் வளர்ந்துள்ள வேம்பின் ஒள்ளிய தளிரை அணிந்து, தெளிவான பறை முன்னாலே, போதலே உடைய ஆண் யானையைப்போல மிடுக்குடன் நடந்து வெவ்விய போரைச் செய்யும் பாண்டிய மன்னனும் வந்தான்; அவனுக்கு முன் எதிர்ப்பட்ட புதிய வீரரோ பலர்; பகற்பொழுது, மிகச் சிறிது. இவர்கள் அழியாமல் எஞ்சுவார்களோ!