பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

பாண்டியன் நெடுஞ்செழியன்

ஒன்று போக ஒன்றாகப் போர் எழுவதையும், திருமணம் செய்துகொண்ட பிறகும் அரசனுக்குப் போர் புரிவதில் உள்ள வெறி அடங்காமல் இருப்பதையும் கண்ட சான்றோர் கவலை கொண்டனர். தக்க வழியில் இந்தப் போக்கைத் தடை பண்ண வேண்டும் என்ற அவா அவர்கள் உள்ளத்தே முறுகி எழுந்தது. புலவர்கள் இத்துறையில் தம்மால் ஆன முயற்சிகளைச் செய்தால் நலம் பிறக்கும் என்று தேர்ந்தார்கள். நக்கீரரையும் மாங்குடி மருதனாரையும் மற்ற நல்லிசைப் புலவர்களையும் அணுகித் தங்கள் கருத்தைத் தெரிவித்துக் கொண்டனர். ‘என்ன செய்வது? எப்படிச் சொல்வது? யார் சொல்வது?’ என்ற வினாக்கள் முன் நின்றன.

‘கவிதையிலே நம் ஆர்வத்தைத்தெளிவாகத் தெரிவிக்கலாம். அது அத்துணைச்சிறப்பன்று. நேர்முகமாகச் சொல்வதைவிட மறைமுகமாகச் சொல்வதே கலையின் பண்பு. அரசன் உள்ளத்தில் படும்படி கவிதை பாட வேண்டும்’ என்று புலவர்கள் தமக்குள் ஆய்ந்து பேசினார்கள். கடைசியில் நக்கீரர் தாம் ஒருபாட்டுப் பாடுவதாக ஒப்புக்கொண்டார். தலைவனாகிய அரசன் போர் செய்யப் புக்குப் பலகாலம் பாசறையிலே தங்கி விடுகிறான். அப்போது அவனுடைய காதலி அரண்மனையில் இருந்து வருந்துகிறாள். குளிர்காலம் வருகிறது. வாடை வீசுகிறது. ‘இன்னும் அவர் வரவில்லையே!’ என்ற வருத்தத்துடன் அவனுடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள். ‘இவள் வருத்தம் தீர அரசன் வெற்றி பெற்று மீள்வானாக!’ என்று துர்க்கையை வழிபட்டுப் பிரார்த்தனை செய்கிறாள் ஒரு முதியவள். அவள் சொல்வதாக ஒரு பெரிய பாட்டைப் பாடினார் நக்கீரர். அதற்கு நெடுநல்வாடை என்றுபெயர்.