பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

தித்திக்கும் இந்த முத்திரைப் பாடலை! முதற்பாடலாகக் கொண்டு, நண்பர் வள்ளியப்பா அவர்கள் நேரு தந்த பொம்மை என்னும் அருமையான நூலைப் படைத்திருக்கிறார். திரு அழ. வள்ளியப்பா அவர்கள் குழந்தை இலக்கிய உலகின் ஒளி விளக்கு. வாழ்நாளெல்லாம் குழந்தைகளுக்காகவே எழுத்தாலும் பேச்சாலும் அரும்பாடுபட்டு வருபவர்; பிறரையும் குழந்தைகளுக்காக எழுத வைத்துக் குழந்தை எழுத்தாளர்களின் உற்பத்திச் சாலையாக விளங்குபவர்.

ஒருசமயம் நேரு அவர்கள் பொம்மைக்காரனிடம் இருந்த எல்லாப்பொம்மைகளையும் விலைக்கு வாங்கிக் குழந்தைகளுக்கு அன்பளிப்பாக வழங்கினார். இந்நிகழ்ச்சியை அமுதக் கவிதைகளால் சித்திரித்த கவிஞர் நேரு தந்த பொம்மை என்னும் தலைப்பையே இந்தப் புத்தகத்துக்குச் சூட்டியுள்ளார். இந்நூல் நேருவின் வாழ்க்கையில் நேர்ந்த சுவையான நிகழ்ச்சிகளையும் அவருடைய அருமை பெருமைகளையும் எடுத்துக் கூறும் கவிதை மலர்கள் பூத்துக் குலுங்கும் ஒரு பூஞ்சோலை. பொன் குடத்துக்குப் பொட்டு வேண்டுமா? இந்த அருமையான நூலுக்கு அணிந்துரை வேண்டுமா?

'கொண்டவர்க்கு எது பிடிக்கும் குழந்தைகள் எதை விரும்பும்?' என ஒரு நல்ல தாய் இனிய உணவைச் சமைக்கிறாள், அத்தகைய தாயுள்ளம் நம் கவிஞருக்கும் உண்டு. பிஞ்சுச் செல்வங்கள் சந்த இன்பத்தோடு பாடி ஆடும் வண்ணம் கவிதைச் சமையல் படைத்துள்ளார், குழந்தைக் கவிஞர். தின்னத் தின்னத் தெவிட்டாத மிட்டாய்க் கடையை விரித்துள்ளார். இனிமை எளிமை, பொருளமைதி, கற்பனை நயம், உவமை நயம், நகைச்சுவை ஆகிய அனைத்தும் இவர் பாடல்களில் பின்னிக்கிடக்கின்றன. ஒவ்வொரு பாடலையும் படிக்கும் போது நேருவையே நேரில் காண்பது போன்ற உணர்ச்சி தோன்றுகிறது.

சின்னஞ் சிறுவர் நம்மையும்
சிவந்த ரோஜா மலரையும்
என்றும் மறந்திடாதவர்
எவரும் போற்றும் நல்லவர்