பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அவள் குறை

1

"உங்கள் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணினால் கூட இவ்வளவு சிரத்தை இருக்காது போல் இருக்கிறது. விழுந்து விழுந்து செய்கிறீர்களே!” என்று வேடிக்கையாகப் பேசினாள் ராஜாராமின் மனைவி.

"ஆமாம். பாவம்! நல்ல பிள்ளை. ஏதோ நம்மை வந்து அண்டினான். குடியும் குடித்தனமுமாக இருப்பதைப் பார்த்துச் சந்தோஷப் படலாமே என்றுதான். நாய்க்குட்டி மாதிரி உழைக்கிறான். இந்தக் காலத்தில் எசமான விசுவாசத்தோடு வேலை செய்கிறவன் எவன் இருக்கிறான்?” என்றார் ராஜாராமன்.

வேலுவுக்குக் கோடம்பாக்கத்திலே கல்யாணம். அது நன்றாக முடியவேண்டுமே என்று அவருக்குக் கவலை. சென்னையில் ஒரு கண்ணாடிக் கடை வைத்திருந்தார் அவர். மயிலாப்பூரில் அவருக்கு வீடு இருந்தது. வியாபாரி என்றாலும் அவர் தாராள மனசு உடையவர்.

வீட்டில் இருந்தபடியே டெலிபோன் மூலம் கடையைக் கவனித்துக் கொள்வார். அங்கே நிர்வாகம் செய்யும் ஊழியரோ, மற்றவர்களோ யாரானாலும் அவரிடத்தில் அன்போடு பழகினர்கள். மொத்த வியாபாரி. நல்ல முகராசி உள்ளவர். வருகிற வாடிக்கைக்காரர்களிடத்திலும் வேலைக் காரர்களிடத்திலும் அன்பு காட்டி உபசாரம் செய்வார்.

ஒருகணம் சும்மா இருக்க மாட்டார். எதாவது செய்து கொண்டே இருப்பார். எதையும் திருத்தமாகச் செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் கோபம் வந்துவிடும்.

வீட்டில் தச்சன் வந்து ஏதோ சில்லறை வேலை செய்தான். அடுத்த மாதம் தச்சு வேலைக்குரிய சாமான்களை