பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

101

யர்களே இருந்தார்கள். கொலம்பஸ் ஈவிரக்கமற்றுச் செய்த இந்த முறையினால் மனித சமுதாயத்தில் ஓர் இனமே அழிந்தொழிந்து போயிற்று.

மார்க்கரிட்டும் மற்றவர்களும் கூறிய குற்றச் சாட்டுக்களைக் கேட்ட அரசரும் அரசியாரும், ஜுலான் அகுவாடோ என்பவனை இது பற்றி விசாரிக்க இசபெல்லாவுக்கு அனுப்பினார்கள். அவன் வந்தபின், தன் அரசியல் தகுதியை நிலைநாட்டிக் கொள்ள ஸ்பெயினுக்குத் திரும்புவதே நலமென்று கொலம்பஸ் முடிவுக்கு வந்தான். ஆகவே தலைமைப் பொறுப்பை அவன் பார்த்தலோமியோவிடம் ஒப்படைத்தான். இசபெல்லாவை விட்டு வேறொரு புது நகரத்தை உருவாக்க உத்தரவிட்டுவிட்டு அவன் 1496-ஆம் ஆண்டு மார்ச் மாத வாக்கில் நைனா கப்பலில் புறப்பட்டான். கூடவே மற்றொரு கப்பலும் சென்றது.

இரு கப்பல்களிலும் 225 ஸ்பானியர்களும் 30 இந்திய அடிமைகளும் சென்றார்கள். எதிர்பார்த்தபடி கப்பல்கள் விரைவாகச் செல்லவில்லை. நாளாக ஆக உணவுப் பொருள்கள் குறைந்தன. கடைசியில் அரைப் பட்டினியும் முக்கால் பட்டினியும் கிடக்கும்படியான நிலைமை வந்தது. அப்போது சில ஸ்பானியர்கள், பசியைத் தீர்க்க இந்திய அடிமைகளைக் கொன்று தின்னலாம் என்று யோசனை சொன்னார்கள். முதலில், மனித இறைச்சி தின்னும் பழக்கமுடைய கரீபிய இனத்தவரைத் தின்னலாம் என்றும், பிறகும் தேவைப்பட்டால் டாயினோக்களைத் தின்னலாம் என்றும் சொன்னார்கள். மனித இறைச்சி தின்னும் கரீபியர்களைக் கொன்று தின்பதால், அவர்களுடைய பாவத்திற்குப் பரிகாரம் ஏற்படும் என்றும், பழிக்குப் பழி வாங்கியதாக ஆகும் என்றும் கூறினார்கள். என்ன இருந்தாலும் அவர்களும் மனிதர்கள்தாம் ! அவர்களைக் கொன்று

கொ–7