பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

காற்றில் வந்த கவிதை

அத்தை மகனை மச்சான் என்று அழைப்பார்கள். மைத்துனன் என்று கூறுவதைவிட மச்சான் என்கிறபோது உறவு அதிகமாகக் காண்கிறது. அவன் அன்பு மச்சான்: பொன்னு மச்சான். பொன்போல மதிப்பிற்குரியவன்.

மச்சான் ஒருவன் கோயம்புத்தூருக்குப் புறப்படுகிறான். கொங்குநாட்டுக் கிராமத்திலிருந்து பட்டணத்திற்குப் போகிறவன் மாட்டு வண்டியில்தான் சாதாரணமாகப் போவான். காரிக் காளையையும் மயிலைக் காளையையும் பூட்டிய வண்டியிலே மச்சான் புறப்படுகிறான்.

சுகமாகப் போய் வரும்படி அவனை வழியனுப்புகிறாள் ஒரு பெண். வரும்போது தனக்கு விருப்பமான சேலையும் வாங்கிவரச் சொல்லுகிறாள்.

பட்டுச் சேலை என்று அவள் கூறவில்லை. ஆனல், பொன்னு மச்சான் பட்டுச் சேலையே வாங்கி வருவதாக வாக்களிக்கிறான். சேலை மட்டுமா? ரோஜாப் பூவும் வாங்கி வருவதாக அவன் கூறுகிறான். அவள் கேட்டது மருக் கொழுந்துதான். அன்பின் பெருமையை அவர்களுடைய பேச்சிலே நாம் காண்கிறோம்.

காரிமயிலைக்காளை பொன்னுப் பூங்குயிலே
கட்டினேண்டி வண்டியிலே பொன்னுப் பூங்குயிலே
பாதை கிடுகிடுங்க பொன்னுப் பூங்குயிலே
போயிவாரேன் கோயமுத்துார் பொன்னுப் பூங்குயிலே


சொகமாகப் போயிவாங்க பொன்னு மச்சானே
செவப்புச் சிலவாங்கிவாங்க பொன்னு மச்சானே
வழிக்குத் துணை கூட்டிப்போங்க பொன்னு மச்சானே
மருக்கொழுந்து வாங்கி வாங்க பொன்னு மச்சானே