104
செம்மொழித் புதையல்
தோழி :- (மருண்டு) அன்னாய், நீ சொல்வது ஒன்றும் எனக்கு விளங்கவில்லை. தலைவர் உடன் இருக்கும்போது இவையெல்லாம் உனக்கு இன்பத்தைத் தானே செய்யும்? அவரை விட்டுத் தனியே வந்திருப்பதனால் இவ்வாறு பேசுகின்றாயோ?
தலைவி :- தோழி, இனி, தனியேதானே இருக்கவேண்டும். இப்போது உன்னோடு தனியே இருப்பது தனிமையாகுமா?
தோழி :- (பின்னும் மருண்டு) அன்னாய், உன் கருத்தை விளக்கமாய்ச் சொல், எனக்கு உன் பேச்சு சிறிதும் விளங்கவேயில்லை.
தலைவி :- நேற்று நம் காதலர் பேசியதில் இருந்து அவர் நம்மைப் பிரிந்தே போவர் என்று அறிகின்றேன். அது முதல் என் நெஞ்சம் இவ்வாறு துயரடையத் தொடங்கிவிட்டது.
தோழி :- (சுட்டிக்காட்டி) அதோ, நம் தலைவர் வருகின்றார். நீ அப் புதரிடையே மறைந்துகொள். நான் அவருடன் பேசி இதன் உண்மையை அறிகின்றேன்.
தலைவி :- நல்லது; அப்படியே செய். (மறைதல்)(தலைமகன் வருகின்றான் தோழி பூப்பறிப்பதைக் காண்கின்றான்; அவள் அருகே வருகின்றான்.)
தலைவன்:- (நெருங்கி) தோழி, நீ இங்கே என்ன செய்கின்றாய்?உன்னோடு தலைமகள் வந்தாளே எங்கே?
தோழி :- (கையாற் காட்டி) அதோ தோன்றும் புதர்க்குப் பின்னே பூப்பறிக்கப் போனார்கள். அழைத்து வரலாமே. (போக ஒருப்படுதல்)
தலைவன்:- (தடுத்து) வேண்டா. நில் நில். உன்னிடம் ஒரு செய்தி சொல்ல வேண்டும். அன்றும் நீ தானே துணை செய்தாய்?
தோழி :- (தலைகுனிந்து தனக்குள்ளே) தலைமகள் சொன்னது போல், இவர் தன் பிரிவைத்தான் இப்போது நம்பால் சொல்வார்போல இருக்கிறது. இருக்கட்டும்.