பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

செம்மொழிப் புதையல்


போர் வீரரை ஏறட்டு நின்று வருக என அழைத்தான்; பாம்புமிழந்த மணிகண்டும் அதனை நெருங்குதற்கு மக்கள் அஞ்சுவதும் போலப் பகை வீரர் அனைவரும் அஞ்சினர் என்பார்,

‘தமர்பிறர் அறியா அமர்மயங் கழுவத்து
இறையும் பெயரும் தோற்றி நுமருள்
நாள்முறை தபுத்தீர் வம்மின் ஈங்கெனப்
மலைந் தொருசிறை நிற்ப யாவரும்
அரவுமிழ் மணியிற் குறுகார்
நிரைதார் மார்பின்நின் கேள்வனைப் பிறரே.’

என்று கூறுகின்றனர். பெற்ற தாயொருத்தி போருக்குச் சென்ற ஏனை வீரரெல்லாரும் வந்தும் தன் மகன் நெடிது வாராமை கண்டு, நெஞ்சில் அச்சமோ அவலமோ கொள்ளாமல்.

‘எல்லா மனையுங் கல்லென் றனவே
வேந்து உடன்று எறிவான் கொல்லோ
நெடிது வந்தன்றால் நெடுந்தகை தேரே.”

(புறம் - 296)

என்று கூறுகின்றாள். போரில் அணி வகுப்புற்று நிற்கும் வீரன் ஒருவன் வேந்தன் தன்னை முந்தச் செலுத்தாமைக்கு வருந்தி,

‘எமக்கே கலங்கல் தருமே, தானே
தேறல் உண்ணும் மன்னே, நன்றும்
இன்னான் மன்ற வேந்தன் இனியே,
நோரர் ஆரெயில் முற்றி
வாய் மடித்து உரறிநீ முந்துஎன்னானே.”

என்கின்றான். இவ்வாறு பண்டை உரிமை வாழ்வில் திளைத்த தமிழ் மக்கள் அச்சம் இலராய் வாழ்ந்த செய்திக்குச் சான்றுகள் பலவுண்டு. இல்லையானால் நளியிரு முந்நீர் நாவா யோட்டி வளி தொழிலாண்ட உரவோர் எனும் பெயரை எய்த முடியுமா?

உரிமை வாழ்வுக்கு அடுத்த உறுப்பாவது வறுமையின்மை; வறுமை நிலை ஒரு நாட்டின் உரிமை வாழ்வைக் கெடுத்துச் செல்வமுள்ள நாட்டுக்கு அதனை விரைவில் அடிமையாக்கிவிடும் ‘வறியார் இருமை அறியார்’ என்பர். வறுமையுள்ள நாடு அறிவு ஒழுக்கங்களில் நலம்பெறாது; செல்வத்தைப் பெருக்கும் துறைகளான கைத்தொழில் வாணிபம் உழவு முதலிய செயல்