பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

'வெற்றிலை வாணிகர்' குறித்தும், ‘உரிமை வாழ்வில் இலக்கியப் பணி'யையும் ஆய்வுரையாக எழுதியுள்ளார். உரை எழுதுவது ஒரு தொழிலா? என்ற ஒரு வினாவை எழுப்பி, அதற்கு விடை தரும் வகையில், 'உரையனுபவம்’ என்னும் கட்டுரையில் தம் புலமை நுணுக்கத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

தமிழுக்குப் பிற சமயத்தாரும் தொண்டாற்றியதைக் காட்டும் வகையில், 'சமண முனிவர் தமிழ்த்தொண்டு’, ‘இசுலாம் செய்த இனிய தொண்டு ஆகியவை குறித்த கட்டுரைகள் நூலுக்கு அணி செய்கின்றன. தத்துவஞானத்துக்கு அறிவியல் பாங்கு இன்றியமையாது வேண்டப்படும் என்னும் கருத்தை 'விஞ்ஞானமும் தத்துவஞானமும்' என்னும் கட்டுரையில் காணலாம்.

இவ்வாறாக, என் தாத்தாவின் ஒளிவீசும் ஒவ்வொரு கட்டுரை மணியும் நன்கு கோக்கப்பட்டு அழகிய தமிழ் மாலையாக இந்நூலினைப் புலமை மணம் கமழுமாறு தொகுத்து வழங்கிய எழுத்துச்செம்மல் திரு. பி.வி. கிரி அவர்களுக்கு எங்கள் குடும்பத்தினர் சார்பில் பெரிதும் நன்றி பாராட்டுகின்றோம்.

தமிழகத்தில் தமிழ்ச் சுரங்கமாகத் திகழும், பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பன் அவர்கள் நிறுவிய மணிவாசகர் பதிப்பகத்தின் வாயிலாகத் தாத்தாவின் 'செம்மொழிப் புதையல்' நூல் வெளிவருவது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. இந்நூலைத் தமிழக மக்களுக்கு வழங்குவதில் இறும்பூதெய்துகிறோம்.

இந்த நூலை மகிழ்ச்சியுடன் வெளியிட முன்வந்த பதிப்புச் செம்மலின் அருமைத் திருமகன் செயலாண்மைச் செம்மல் திரு. ச. மெ. மீனாட்சி சோமசுந்தரம், குணக்குன்று என்று எந்தையார் பரிவோடு அழைத்து மகிழும் மேலாளர் திரு. இராம. குருமூர்த்தி ஆகிய இருவரைப் பாராட்டி மகிழ்கிறோம். தமிழுலகம் தமிழ்ப் புதையலைப் பெற்று, அறிவு நலம் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

15